அணியில் சேர்க்கப்படாத அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின் பவுலர்களில் ஒருவர் அஸ்வின். அணியில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட அஸ்வின் நீண்ட காலத்திற்கு நம்பர் ஒன் சுழற் பந்து வீச்சாளராக திகழ்ந்தார். ஐசிசியின் தரவரிசையில் முதல் இடம், டி-20 யில் சிறப்பான ஆட்டம் என முழு பார்மில் இருந்தார். இந்த நிலையில் அணியின் கேப்டனாக கோஹ்லி பொறுப்பேற்றதை அடுத்து, இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. அணியின் முக்கிய பவுலரான அஸ்வின் வெளியேற்றப்பட்டார்.
யோ யோ டெஸ்ட்டில் கலக்கிய அஸ்வின்
அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அஸ்வின் சில வாரங்களுக்கு முன் "நான் இதுவரை மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறேன், எனக்கு அணியில் விரைவிலேயே வாய்ப்பு கிடைக்கும்'' என நம்பிக்கையாக பேசியிருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பெங்களூரில் நடந்த யோ யோ டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வின் கலந்து கொண்டார். இதில் மிகவும் சிறப்பாக பர்பார்ம் செய்த அஸ்வின் மொத்த டெஸ்டயும் முழுவதுமாக முடித்தார். இது இந்திய வீரர்களை அணியில் சேர்ப்பதற்காக செய்யப்படும் மிக முக்கியமான தேர்வு முறையாகும்.
இந்திய அணியில் வாய்ப்பு
இந்த நிலையில் நியூசிலாந்து தொடருக்கு அடுத்ததாக இலங்கைக்கு எதிராக இந்திய அணி நவம்பர் 16ல் இருந்து டெஸ்ட் தொடர் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் கண்டிப்பாக தமிழக வீரர் அஸ்வின் இடம்பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் விளையாட அதிக அளவு திறமையும், அனுபவமும் வேண்டும் என்பதால் அஸ்வின் இந்த தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மேலும் அவர் யோ-யோ தேர்வு முறையை கிளியர் செய்தது, ரஞ்சி போட்டியில் சிறப்பாக விளையாடியதும் கூட முக்கியமான காரணம் ஆகும். மேலும் இவர் கோஹ்லியின் தலைமைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளவும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இலங்கை தொடருக்கான உத்தேச அணி
இந்த நிலையில் அணியில் அஸ்வின் இடம்பெறுவது போலவே நீண்ட நாட்களாக புறக்கணிக்கப்பட்டு வந்த ரவிந்தர் ஜடேஜாவும் சேர்க்கப்பட இருக்கிறார். ரஞ்சி போட்டியில் 200 ரன்களை ஒரு மேட்ச்சில் அடித்ததன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு வந்திருக்கிறது. மேலும் அணியில் கே.எல் ராகுல், புஜாரா, சாகா , முரளி விஜய் ஆகியோர் இடம்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்