கெளஹாத்தி டி-20
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது டி-20 போட்டி நேற்று கெளஹாத்தியில் நடைபெற்றது. போட்டியின் தொடக்கத்திலிருந்தே இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் திணறி வந்தது. இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி, டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இந்தியா நிர்ணயித்த 119 என்ற ரன்னை மிக எளிதாக அடித்து ஆஸ்திரேலியா அணி அபாரமாக வென்றது.
மேன் ஆப் தி மேட்ச் ஜேசன் பெஹ்ரெண்டர்ஃப்
நேற்றைய போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடியவர் ஆஸ்திரேலிய அணி வீரர் ஜேசன் பெஹ்ரெண்டர்ஃப் ஆவர். நான்கு விக்கெட் எடுத்து வெறும் 21 ரன்களை மட்டுமே இவர் விட்டுக் கொடுத்தார். இந்தியாவின் முக்கிய வீரர்களான ரோஹித், கோஹ்லி, தவான், மனிஷ் பாண்டே என அனைவரது விக்கெட்டையும் இவர்தான் எடுத்ததார். இவரது சிறப்பான ஆட்டத்தால் நேற்று ''மேன் ஆப் தி மேட்சாக'' அறிவிக்கப்பட்டார்.
|
ஜான் சீனாவின் தம்பி எனப்பட்டார்
இந்த நிலையில் இவரது புகைப்படம் பிரபல டபிள்யு டபிள்யு வீரர் ஜான் சீனாவின் புகைப்படத்துடன் இணைத்து பரப்பப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் என்றும் கதைகள் சொல்லபட்டன. இரண்டு மேட்ச்சுகள் மட்டுமே ஆடிய ஆஸ்திரேலிய வீரர் பெஹ்ரெண்டர்ஃப் ஒரே நாளில் இந்திய அளவில் வைரல் ஆனார். டபிள்யு டபிள்யு வீரர் ஜான் சீனாவுக்கு இந்தியாவில் நிறைய ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய வீரர் பெஹ்ரெண்டர்ஃப் பேட்டி
இந்த நிலையில் நேற்றைய போட்டிக்குப் பின்பாக ஆஸ்திரேலிய வீரர் பெஹ்ரெண்டர்ஃப் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் நீங்கள் ஜான் சீனா போலவே இருக்கிறீர்கள் என்பது தெரியுமா என்று கேட்கப்பட்டது. இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்ப்பார்க்காத பெஹ்ரெண்டர்ஃப் சிரிக்கத் தொடங்கினார். அதன்பின் ''நான் டபிள்யு டபிள்யு வீரர் ஜான் சீனா போல இருக்கிறேனே என்று தெரியாது. ஆனால் அவர் என்னைவிட மிகவும் வலுவானவர். நல்ல உடல் வாகு கொண்டவர்'' என்று சிரித்தபடி கூறினார்.