ராஞ்சி: பேட்டிங் சொர்க்கபுரியான, ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.
இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸி. முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் இன்னிங்சில் 451 ரன்கள் எடுத்தது. இந்தியா தனது முதல் இன்னிங்சில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 603 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. புஜாரா 202 ரன்கள், சாஹா 117 என விளாசினர்.
நேற்று மாலையில் 2வது இன்னிங்சை ஆரம்பித்தது, ஆஸ்திரேலியா. இன்று மாலை வரை 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த அந்த அணி, 204 ரன்கள் எடுத்திருந்தது. எனவே இதற்கு மேல் இந்தியா 2வது இன்னிங்சை ஆடி வெற்றி பெறுவது இயலாத நிலை என்பதால் இரு கேப்டன்கள் ஒப்புதலோடு ஆட்டம் டிராவில் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பவுலர்கள் 100 ஓவர்கள் வீசிய நிலையில், 204 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்த நிலையில் போட்டி டிராவானது.
ஆஸ்திரேலிய அணி சார்பில், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ரவீந்திர ஜடேஜா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தத் தொடரின் நான்காவது மற்றும் கடைசி போட்டி, வரும் 25ம் தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது. இரண்டு அணிகளும், இதுவரை நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. இந்த டெஸ்ட் போட்டியில் பெறும் வெற்றிதான் தொடரின் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும்.