மும்பை: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் என்ற, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருதில், சிறந்த அணிக்கான விருது மகளிர் கிரிக்கெட் அணிக்கும் சிறந்த வீராங்கனைக்கான விருது மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜுக்கும் வழங்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும், பிரபல தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்காவும் இணைந்து, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் விருதை அறிமுகம் செய்துள்ளனர். முதல் விருது வழங்கும் விழா மும்பையில் நடந்தது.
அதில், மிகச் சிறந்த அணிக்கான விருது, இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கிடைத்தது. இந்த ஆண்டில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, ஹாக்கி அணி, ஜூனியர் ஹாக்கி அணி, இந்திய கபடி அணி, மகளிர் ஹாக்கி அணிகள் இடையே போட்டி இருந்தது.
இறுதியில், மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிக்குச் சென்று போராடிய இந்திய அணி ஒருமனதாக விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
அணிகள் விளையாட்டில் சிறந்த வீராங்கனைக்கான விருதை, மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் பெற்றார்.
விருதை வழங்குவதால், எந்தப் பிரிவிலும் விராட் கோஹ்லியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இந்த நிலையில், அணிகள் விளையாட்டியில் மிகச் சிறந்த வீரர் விருது, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.
கபடி வீரர் பிரதீப் நர்வால், கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, ஹாக்கி வீரர் ருபிந்தர் பால் சிங், கிரிக்கெட் வீரர்கள் சதேஸ்வர் புஜாரா, ஹார்திக் பாண்டியா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தன.