கொழும்பு: இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி-20 போட்டியில் விளையாடுகிறது. இதுவரை நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை இலங்கையின் பல்லகல்லேவில் தொடங்க உள்ளது. முடிந்த கொழும்பு நகரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்து ஐ.சி.சி. நடவடிக்கை மேற்கொண்டது.
இதனால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியாது. இந்நிலையில், ஜடேஜாவுக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.