மும்பை: நேற்று மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 280 ரன் ஸ்கோரை எளிதாக கடந்து வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. இந்தப் போட்டியில் பவுண்டரி லைனில் 'பால் பாய்' வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறுவனின் செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ டிவிட் செய்து அவரை பாராட்டியுள்ளது.
இந்திய அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. தொடக்கத்தில் இந்திய அணி மிகவும் மெதுவாகவே ஆடியது.
இந்திய அணியின் மெதுவான ஆட்டத்தால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் இன்றி காணப்பட்டனர். இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் ஆடம் வீசிய 25 வது ஓவரில் மொத்த மைதானம் மொத்தமும் ஆர்ப்பரித்தது. 25 வது ஓவரின் இரண்டாவது பந்தை இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி எதிர்கொண்டார்.
லெக் திசையில் வந்த இந்த பந்தை கோஹ்லி வேகமாக தூக்கி அடித்தார். பவுண்டரி லைனில் நின்ற நியூசிலாந்து வீரர் இந்த பந்தை பிடிக்க முயற்சித்தும் முடியாததால் லைனை தாண்டி சென்றது. ஆனால் பவுண்டரி லைனுக்கு அடுத்து நின்ற "பால் பாய்" சிறுவன் உயரமாக எகிறிக் குதித்து அந்த பந்தை லாவகமாக பிடித்தார்.
பந்து சிக்ஸ் சென்றதுக்கு கை தட்டியதை விட பலரும் இவர் பிடித்த கேட்சிற்குத்தான் கை தட்டினார்.இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ இவரது கேட்ச்சை பாராட்டும் வகையில் அந்த வீடியோவை மட்டும் கட் செய்து தனது வலைதளத்தில் ஏற்றியுள்ளது. மேலும் அதை பேஸ்புக், டிவிட்டரில் ஷேர் செய்துள்ளது.