புதுடில்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வந்த பிறகு, மாநில கிரிக்கெட் சங்கங்களின் வருவாய் இரட்டு மடங்காக உயர்ந்துள்ளது. கிரிக்கெட் சங்கங்களுக்கு கிடைக்கும் பணம் எவ்வளவு என்பதற்கான ஒரு சிறிய கணக்கை இங்கு பார்ப்போம்.
கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில், 26 கிரிக்கெட் சங்கங்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ), தனது வருவாயில், 70:30 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கிறது. அதன் மூலம், அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்கள் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஐபிஎல் வருவதற்கு முன்பாக, மாநில சங்கங்களுக்கு, ஆண்டுக்கு, ரூ.25 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்தது. ஐபிஎல் வந்த பிறகு, இந்தத் தொகை, ரூ.50 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
சமீபத்தில், ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு, வழங்கப்பட்டது. இதன் மூலம், பிசிசிஐக்கு, ஆண்டுக்கு, ரூ.3,269.50 கோடி கிடைக்கும்.
இதைத் தவிர, டைட்டில் ஸ்பான்சரான, வைவோ நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு, ரூ. 439.80 கோடி அளிக்கும். ஆக மொத்தம், ஆண்டுக்கு, ரூ.3,709.30 கோடி கிடைக்கும்.
இந்திய அணி உள்நாட்டில் விளையாடும் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை மூலம், ஆண்டுக்கு, ரூ.770 கோடி கிடைக்கும்.
இதைத் தவிர பல்வேறு ஸ்பான்சர் நிறுவனங்களும் கோடிக் கணக்கில் கொட்டித் தருகின்றன.
வருவாயில், ஐபிஎல் பிரான்சைசிகளுக்கு, 45 முதல், 50 சதவீதம் வரை கொடுக்க வேண்டியுள்ளது. அதன்பிறகு, உள்ள பணத்தில், 70 சதவீதத்தை மாநிலங்களுக்கு பிசிசிஐ வழங்குகிறது. அதன்படி, தற்போதைய தோராயக் கணக்கின்படி, ரூ.1,141 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு பிசிசிஐ அளிக்கும். அதாவது, ஆண்டுக்கு, ரூ.50 கோடி வரை மாநில சங்கங்களுக்கு கிடைக்கும். அதை கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்காக மாநில சங்கங்கள் பயன்படுத்த வேண்டும்.