ஹாட்ரிக் எடுத்த குல்தீப்
இந்திய அணியில் புதிய வைரலாக உருவாகி இருப்பவர் குல்தீப் யாதவ். ஒரேநாளில் இவர் ஸ்பின் உலகின் சூப்பர் ஸ்டார் ஆனதுதான் 2017ல் தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் இவர் ஹாட் டிரிக் விக்கெட் எடுத்தார். இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் ஹாட் டிரிக் எடுத்த மூன்றாவது பவுலர் இவர்தான். கபில் தேவ், சேட்டன் சர்மாவிற்கு அடுத்த இவர்தான் ஹாட் டிரிக் எடுத்துள்ளார். இவர் எடுத்த ஹாட் டிரிக்கை ஈடன் கார்டன் எத்தனை காலம் ஆனாலும் சொல்லும்.
பாகிஸ்தானின் லக்
2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த இலங்கை வீரர்கள் மீதான தாக்குதல் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும். இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் நாட்டில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற அனைத்து நாடுகளும் மறுப்பு தெரிவித்து வந்தன. இதனால் கடந்த 8 ஆண்டுகளாக பாகிஸ்தானை தவிர எந்த நாட்டு வீரரும் அங்கு செல்லவில்லை. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் ஐசிசி அங்கு உலகின் சிறந்த 11 வீரர்களை தேர்ந்தெடுத்து ''வேர்ல்ட் 11'' அணியை அங்கு அனுப்பி போட்டியை நடத்தியது. பாகிஸ்தானின் ரசிகர்கள் இந்த போட்டியால் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
2017 கொடுத்த முதல் வெற்றி
கிரிக்கெட் உலகில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் அணி வங்கதேசம். ஆனாலும் இதுவரை இந்த அணி ஒருமுறை கூட ஆஸ்திரேலியாவை டெஸ்ட் போட்டிகளில் வென்றதே இல்லை. மிர்பூரில் இந்த வருடம் நடந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஹீம் தலைமையிலான இந்த வெற்றிதான் வங்கதேசத்தின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியாகும்.
வேகமான கோஹ்லி
கோஹ்லி காட்டில் இந்த வருடம் ரன் மழை பொழிந்தது. அதிவேகமாக 9000 ரன்கள் அடித்து இருந்த சாதனை ஏ பி டிவில்லியர்ஸ் கையில் இருந்தது. ஆனால் இந்த வருடம் கோஹ்லி ஆடிய ருத்ர தணடவத்தால் மிக வேகமாக 9000 ஆயிரம் ரன்களை கடந்தார். 194 இன்னிங்ஸில் அவர் இந்த சாதனையை அடைந்து உள்ளார். இந்த வருடம் மட்டுமே இவர் 6 சதம் அடித்து சச்சினைன நோக்கி வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறார். மேலும் அவர் இரண்டு இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை தொடக்கம்
கிரிக்கெட் உலகில் ஆப்கானிஸ்தான் அணி யாராலும் கவனிக்கப்படாமல் இருந்தது. 2017ல் நடந்த சாதனை ஒன்று அந்த அணியையே திரும்பி பார்க்க வைத்தது. ரஷீத் கான் என்ற பவுலர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வெறும் 18 ரன்கள் கொடுத்து 7 விக்கெட் எடுத்தார். இவரின் விஸ்வரூப பவுலிங் பார்த்து உலகமே மிரண்டது. இவரது திறமையை பார்த்த சன்ரைசர்ஸ் அணி 4 கோடி கொடுத்து இவரை வாங்கியது. ஒரு ஆப்கான் வீரர் இவ்வளவு விலைக்கு ஏலம் போனது இதுவே முதல்முறை ஆகும்.
வேகமான சதம்
தென்னாப்பிரிக்காவில் கடந்த அக்டோபர் மாதம் வங்கதேச அணிக்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையில் டி-20 போட்டி நடை பெற்றது. இந்த போட்டியில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 36 பந்துகளில் 101 ரன்கள் அடித்தார். இதுவரை ஐசிசி போட்டிகளில் அடிக்கப்பட்டதிலேயே இதுதான் மிகவும் வேகமான சதம் ஆகும். இவர் இதன் மூலம் சக தென்னாப்பிரிக்க வீரர் ரிச்சர்ட் லேவியின் 45 பால் சதம், சாதனையை முறியடித்தார்.
விசில் போடு
இந்த வருடத்தில் கிரிக்கெட் உலகில் ஹாட் டாப்பிக் இதுதான். வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு என கெத்து காட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐபிஎல் போட்டிகளுக்குள் வந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் டோணி மீண்டும் சென்னை அணிக்கு திரும்பி இருக்கிறார். மொத்தம் 6 வீரர்கள் அணிக்கு திரும்புவதால் விசில் போடும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 2018ல் சென்னையின் விஸ்வரூப விளையாட்டை பார்க்க பலரும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.