டெர்பி: மகளிர் உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் தொடர்ந்து 4 வெற்றிகளை குவித்துள்ள இந்திய அணி புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
ஐசிசி நடத்தும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 24-ஆம் தேதி இங்கிலாந்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 8 அணிகள் பங்கேற்று வருகின்றன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா ஒரு முறை மோதி வருகின்றன. முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதி ஆட்டங்கள் ஜூலை 18, 20 தேதியிலும், இறுதிப் போட்டி ஜூலை 23-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் கலக்கி வருகின்றன. இந்தியா சந்தி்த்த 4 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது.
முதல் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 3வது போட்டியில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தியது இந்தியா. இந்த போட்டியில் 169 ரன்களே மட்டுமே எடுத்திருந்தது இந்தியா. ஆனாலும் சிறப்பாக பீல்டி்ங் செய்தும், பந்து வீசியும் பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தொடர்ந்து கலக்கி வரும் இந்திய அணி இன்றைய போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது. இதில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. தொடர்ந்து 4 வெற்றிகளை குவித்துள்ள இந்தியா புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.