புணே: டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆகிய மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை என கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். மேலும் இது எல்லாமே கடவுள் கொடுத்ததுதான் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் டோணி கடந்த 4ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோஹ்லி, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாகவும் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மனம் திறந்த கோஹ்லி, 3 விதமான போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நான் நியமிக்கப்படும் நாள் என் வாழ்க்கையில் வரும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அணியில் நான் நுழைந்தபோது, சிறப்பாக ஆடி ரன்குவிக்க வேண்டும், நிறைய வாய்ப்புகளை பெற வேண்டும், அணியில் நிரந்தர இடத்தைப் பிடிக்க வேண்டும், அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்பதில்தான் எனது கவனம் இருந்தது.
நான் இப்போது 3 விதமான போட்டிகளுக்கும் கேப்டனாகியி இருக்கிறேன். இது எல்லாமே கடவுள் கொடுத்ததுதான். உங்கள் வாழ்கையில் என்ன நடந்தாலும், அது ஏதாவது ஒரு காரணத்துக்காகவே நடக்கும். அதுவும் சரியான நேரத்தில்தான் நடக்கும் என்றார். அதேநேரத்தில், எதிர்ப்புகள், பாராட்டுகள் என பலவகையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கோஹ்லி தெரிவித்தார்.