ராஞ்சியில் கால் வைத்தார் 'மண்ணின் மகன்'.. 'சிக்சர் மன்னரை' பார்வையால் விழுங்கிய போலீஸ்காரர்
ராஞ்சி: இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆடுவதற்காக, டோணியின் சொந்த ஊரான, ஜார்கண்ட் மாநில தலைநகரான, ராஞ்சி நகருக்கு வந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்தியா-இலங்கை நடுவேயான முதல் டி20 போட்டி புனே நகரில் நடைபெற்றது. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
இந்நிலையில், 2வது டி20 போட்டி, நாளை ராஞ்சி நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, இரு அணி வீரர்களும் புனேயில் இருந்து, நேற்று மாலை, ராஞ்சி, பிர்சா முண்டா ஏர்போர்ட்டிற்கு வந்தடைந்தனர்.
செல்லப்பிள்ளை டோணி
மும்பை, சென்னை, பெங்களூர், புனே போல இன்றி, ராஞ்சி ஒரு குட்டி நகரமாகும். தமிழகத்தின் வேலூர் அளவுக்குள்ள அந்த நகரில் இருந்து வந்து இந்தியாவின் கேப்டனாக செயல்படும் டோணிக்கு, சிறு நகரங்களின் செல்லப்பிள்ளை என்ற பெயர் உண்டு. எனவே தங்களது மண்ணின் மகனையும், அவர் வழிநடத்தும் அணியையும் ராஞ்சி ரசிகர்கள் ஏர்போர்ட்டுக்கு வந்து உற்சாகமாக வரவேற்றனர்.
எங்க தல டோணிக்கு பெரிய விசில் அடிங்க
உள்ளூர் ரசிகர்கள் பலத்த கரகோசங்களுக்கு மத்தியில் ஏர்போர்ட்டில் இருந்து சிரித்த முகத்தோடு வெளியே செல்கிறார் கேப்டன் தல டோணி.
தளபதி, எங்கள் தளபதி
ஹர்பஜன்சிங், ரோகித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா என டோணியின் தளபதிகள் நடந்து செல்கையில், ஏர்போர்ட்டில் குவிந்திருந்த ரசிகர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். போட்டோக்களை கிளிக்கி தள்ளிவிட்டனர்.
இடதுகை இரட்டையர்கள்
ஓப்பனர் ஷிகர் தவானும், சிக்சர் மன்னர் யுவராஜும் இணைந்து நடந்து வரும்போது, ரசிகர்கள் ஆரவாரம் செய்த காட்சி இது.
விழுங்கும் பார்வை
யுவராஜ்சிங்கை குளோசப்பில் போட்டோ எடுக்க முண்டியடித்த ரசிகர்களை இப்படத்தில் பார்க்கலாம். பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர் கைகள் வேண்டுமானால் கயிறை பிடித்திருக்கலாம். ஆனால், கண்கள், சிக்சர் மன்னர், யுவராஜை விழுங்கிவிடுவதை போல ஆச்சரியமாக பார்ப்பதை நமது கேமரா கிளிக் செய்துள்ளது.
அங்கிட்டும் அப்படித்தான்
இந்திய வீரர்களுக்கு மட்டும்தான் வரவேற்பா என்றால் இல்லை. இலங்கை வீரர் தில்ஷனுக்கும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் ராஞ்சி ரசிகர்கள்.
வந்தாருக்கு வரவேற்பு
வந்தாரை வரவேற்கும் பண்புமிக்க இந்தியாவில், இலங்கை கிரிக்கெட் வீரர்களை இவ்வளவு ஆர்வமாக போட்டோ பிடித்து வரவேற்றதில் வியப்பு ஏதுமில்லை. இலங்கை கிரிக்கெட் வீரர்களே இந்த வரவேற்பை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.