திடீரென பிரேக்
வேகமாக இஷாந்த் ஓடி வந்த நிலையில், மைதானத்திற்கு வெளியே, சைடு ஸ்கிரீன் பகுதியில், தனது கவனத்தை திசை திருப்பும் வகையில் யாரோ நடந்து சென்றதை உணர்ந்த மேட் ரென்ஷா, பேட் செய்யாமல் பின்நோக்கி நகர்ந்தார். இதனால் அந்த பந்து டெட் பந்து என அறிவிக்கப்பட்டது. ஆனால், இஷாந்த்தோ ஓடிவந்த வேகத்தில் பந்தை வீசிவிட்டார்.
மோதல்
ஸ்டம்பை விட்டு விலகி வெளியே வீசிய அந்த பந்தை விக்கெட் கீப்பர் சாகா பிடித்துக்கொண்டார். தெரிந்தேதான் இஷாந்த் பந்தை வீசினார். இதனால் மேட்ரென்ஷாவுக்கும், இஷாந்த்துக்கும் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டது. எதிர்முனையில் பேட் செய்த ஆஸி.கேப்டன் ஸ்மித் ஓடிவந்தார்.
வீரர்கள் விரைந்தனர்
இதேபோல ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, முரளி விஜய் ஆகியோரும் ஓடிவந்தனர். இதனிடையே கள நடுவரும் இரு வீரர்களுக்கு நடுவே சென்றார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இஷாந்த்தும், மேட் ரென்ஷாவும் ஒருவரை ஒருவர் ஏதோ செல்லி திட்டிக்கொண்டனர்.
அவுட்டாக்கிய இஷாந்த்
இதன்பிறகு இஷாந்த் பந்தில் அனல் பறந்தது. அவர் வீசிய பவுன்சர் பந்தால் மேட் ரென்ஷா தாடையில் லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து பவுன்சராக வீசிய இஷாந்த், திடீரென ஒரு பந்தை, ஓவர் பிட்ச் செய்து, காலை நோக்கி இன்ஸ்விங் செய்தார். இதனால் அதே ஓவரில் மேட்ரென்ஷா எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். அப்புறமென்ன, கொண்டாட்டம் களை கட்டியது.