பர்மிங்காம்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஏ பிரிவு போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆஸ்திரேலியா அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையோடு ஆஸ்திரேலியா களம் இறங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட் 71 ரன்களும், பின்ச் 68 ரன்களும், சுமித் 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் அபாரமாக பந்து வீசிய மார்க் வுட் மற்றும் ரஷீத் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 277 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அடுத்து மோர்கன், ஸ்டோக் ஜோடி ஆஸ்திரேலியா பந்துவீச்சை பதம் பார்த்தனர். இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்த போது இடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபெற்றது.
இறுதியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆஸ்திரேலியா அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது என அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டோக் 102, மோர்கன் 87 ரன்கள் எடுத்தனர். இந்த தோல்வியால் ஆஸ்திரேலியா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதைத் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளுடன் 2வது இடம்பிடித்த வங்கதேசம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.