மூன்றாவது ஒருநாள் போட்டி
இந்திய - நியூசிலாந்து அணிக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி கான்பூர் மைதானத்தில் இன்று நடந்தது. தொடரை வெல்லப்போகும் அணி யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. இந்திய அணியின் ரோஹித் சர்மாவும், கோஹ்லியும் மிகவும் சிறப்பாக ஆடினார்கள்.
நியூசிலாந்துக்கு 338 ரன்கள் இலக்கு
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவும் , கோஹ்லியும் சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தனர். கோஹ்லி 147 ரன்களும், ரோஹித் சர்மா 147 ரன்களும் அடித்தனர். ரோஹித் சர்மா, கோஹ்லி அதிரடியால் இந்திய அணி 50 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் சவூதி, ஆடம், மிட்சல் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.
இந்தியா த்ரில் வெற்றி
இந்திய அணியின் 338 ரன்கள் இலக்கை நோக்கி விறுவிறுப்பாக ஆடியது நியூசிலாந்து அணி. மிகவும் சிறப்பாக விளையாடிய முன்ரோ 75 ரன்களும், லாதாம் 68 ரன்களும் எடுத்தனர். மிகவும் த்ரில்லாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணியின் 338 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் 7 விக்கெட்டுகள் இழந்து , 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது நியூசிலாந்து அணி. இந்திய வீரர்கள் பும்ரா மூன்று விக்கெட்டும் , சாஹல் இரண்டு விக்கெட்டும், புவனேஷ்வர்குமார் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
ஒருநாள் தொடர்
கடந்த ஒருவாரமாக நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியாவிற்கு எதிராக விளையாடி வருகின்றது. மும்பையில் நடத்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியும், புனேயில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றது. தற்போது இந்த தொடரில் வென்றதன் மூலம் இந்தியா 2-1 என தொடரை கைப்பற்றி இருக்கிறது. இதுவரை இந்திய அணி, இந்திய மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு தொடரை கூட தோற்றதில்லை என்ற சாதனையை கோஹ்லி தலைமையிலான அணி தக்கவைத்துள்ளது.