டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பதவி விலகலுக்கு கோஹ்லியே காரணம் என சூசகமாக தெரிவித்துள்ளார் கும்ப்ளே.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும், கேப்டன் கோஹ்லிக்கும் இடையே கடந்த சில தினங்களாக கருத்து மோதல்கள் இருந்ததாக செய்திகள் வெளியாகின.
கும்ப்ளே பயிற்சியாளராக தொடர்வதை கோஹ்லி விரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இருவருக்கும் இடையே மோதல் முற்றியதைத் தொடர்ந்து கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கும்ப்ளே, நான் பதவியில் நீடிப்பது குறித்தும் எனது பயிற்சி அணுகுமுறை குறித்தும் கேப்டனுக்கு மாற்றுக் கருத்து இருப்பதாக பிசிசிஐ நேற்றுதான் என்னிடம் கூறியது.
Thank you! pic.twitter.com/eF5qVzdBRj
— Anil Kumble (@anilkumble1074) June 20, 2017
கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் உள்ள எல்லை வரையறை குறித்து நான் எப்போதும் மதிப்பவன் என்பதால் அதைக் கேட்டதும் நான் ஆச்சரியமடைந்தேன். கேப்டனுக்கும் எனக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டை சரிசெய்ய பிசிசிஐ முயற்சித்தது. ஆனால், இருவருக்கும் ஒத்துவரவில்லை எனவே விலகிச் செல்வதே நல்லது என நான் நம்புகிறேன்.
தொழில்முறை, ஒழுக்கம், அர்பணிப்பு, கட்டுப்பாடு, ஈடுபாடு, நேர்மை, கூடுதல் திறன் ஆகியவற்றை நான் பயிற்சியாளனாக அணிக்குக் கொண்டுவந்தேன். இணைந்து செயல்பட வேண்டுமானால், இந்த முயற்சிகள் மதிக்கப்பட வேண்டும்.
இந்தக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கிரிக்கெட் வாரியம் விரும்பும் நபரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பதே சரியானது என்று நான் நினைக்கிறேன். கிரிக்கெட்டுக்கான எனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வழங்குவேன். பிசிசிஐ நிர்வாகத்துக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கும்ப்ளே கூறியுள்ளார்.