கொல்கத்தா: முன்னாள் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலியின் பிறந்த நாளையொட்டி கிரிக்கெட் பிரபலங்கள் பலர் தெரிவித்த வாழ்த்துக்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கங்குலி கிரிக்கெட்டில் சிறந்த வீரராக வலம் வந்தார். கொல்கத்தா இளவரசன், வங்க புலி என்றழைக்கப்படும் இவரதுத தலைமையில் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா பல முன்னேற்றங்களை கண்டது.
அனைத்து போட்டிகளையும் ஆக்ரோஷத்தோடு அவர் விளையாடியது மட்டுமல்லாமல் மற்ற இந்திய வீரர்களையும் ஆர்வத்துடன் ஆடுமாறு அறிவுறுத்தினார்.
எந்த அணியுடனும் சிறப்பாக போட்டியிட முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்திய அணிக்கு விதைத்தார். ஜாம்பவானாக இருந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து சிறப்பாக விளையாட கங்குலியும் ஒரு காரணம்.
தற்போது கிரிக்கெட் வழிக்காட்டுதல் குழுவின் உறுப்பினராக உள்ள கங்குலிக்கு 44 வயது இன்றுடன் நிறைவடைந்து விட்டது. அவர் தற்போது 45-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.அவர் குறித்து கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ள வாழ்த்துகளை ஒன் இந்தியா வாசகர்களுக்காக தொகுத்துள்ளோம். அவற்றுள் சில,
ராகுல் டிராவிட்- ஆஃப் சைடில் முதலில் கிரிக்கெட் கடவுள் (சச்சின்) இருப்பார் பிறகு கங்குலி இருப்பார்.
சச்சின்- கங்குலியின் மிகப்பெரிய பலமே அவரது புத்திக் கூர்மைதான். கடும் உழைப்பாளி
வீரேந்திர ஷேவாக்- தொடக்க ஆட்டக்காரராக இருந்த கங்குலி அதை எனக்காக தியாகம் செய்தார். என்னை டெஸ்ட் போட்டியாளராகவும் மாற்றியுள்ளார்.
யுவராஜ் சிங்- கங்குலி போல் ஒரு கேப்டனுக்காக நான் உயிரையும் கொடுப்பேன்.
ஹர்பஜன் சிங்- நான் போராடிய போது அவர் என்னை தூக்கிவிட்டார். அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். எனது நன்றியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
நவ்ஜோத் சிங் சித்து- வங்காள புலி எப்போதும் நம்பிக்கையுடன் வெற்றிகளை குவித்து சாதனை படைக்கும். எதிரிகளுடன் மோத தயார் நிலையில் இருக்கும்.
எம்எஸ் டோணி- டிவி திரைகளில் தோன்றும் கங்குலி வேறு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை நேரில் பார்க்கும் போதுதான் அவர் எந்த அளவுக்கு இரக்கக் குணம் படைத்தவர் என்பது தெரியவரும்.
விவிஎஸ் லட்சுமணன்- ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக அடித்து ஆடுவதில் அவர் மிகவும் சிறந்தவர்.
பிரையன் லாரா- சௌரவ்தான் எனக்கு பிடித்த வீரர். அவர் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி வியப்பை அளித்தது. அவர் மீது எனக்கு மரியாதை உண்டு.