பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சி
தற்போது கிரிக்கெட் உலகில் பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆகி உள்ளது. கவுரவ் கப்பூர் என்ற பிரபல தொகுப்பாளர் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்க்கை குறித்தும், தங்களை பற்றி ரசிகர்களுக்கு தெரியாத உண்மைகளையும் பேசுவார்கள். இந்திய கேப்டன் கோஹ்லியில் இருந்து பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
ஹர்திக் பாண்டியா பேட்டி
தற்போது இந்த பேட்டியில் ஹர்திக் பாண்டியா கலந்து கொண்டார். அதில் அவர் தன்னுடைய வாழ்க்கை குறித்து பேசினார். அதில் ''எனக்கு 17 வயது இருக்கும் போது என் அப்பாவிடம் கிரிக்கெட் குறித்து பேசினேன். எனக்காக நீங்கள் யாரிடமும் போய் கெஞ்ச வேண்டாம் என்று அவரிடம் கூறினேன். இப்போது நான் இப்படி இருக்க முழுக்க முழுக்க நான் மட்டும் தான் காரணம். யாரையும் எனக்காக நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை'' என்று கூறினார். இவர் பல வருடமாக அணியில் இடம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார்.
சாப்பிட காசு இல்லை
மேலும் அவர் வீட்டு வறுமை குறித்தும் பேசியுள்ளார். அதில் ''3 வருடங்கள் வீட்டில் சாப்பிட காசு இல்லாமல் இருந்தோம். ஒருவேளை உணவுக்கு நிறைய கஷ்டப்படுவோம். 10 ரூபாய் பணத்தை பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது. கடன்காரர்களுக்கு தெரியாமல் தலைமறைவு வாழ்க்கை நடத்தினேன். லோன் கொடுத்தவர்களிடம் இருந்து மறைந்து வாழ்ந்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல் வாய்ப்பு
மேலும் அவர் தன்னுடைய முதல் கிரிக்கெட் வாய்ப்பு குறித்தும் பேசினார். அதில் ''கையில் சுத்தமாக பணம் இல்லை. அப்போதுதான் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டியில் 70 ஆயிரம் கொடுத்தார்கள். அந்த பணம்தான் எங்கள் மூன்று வருட பசியை போக்கியது. முதல் தடவை மூன்றுவேளை சாப்பிட்டோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.