டெல்லி: இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து தானாக ஓய்வு கேட்டதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கூறியிருக்கிறார். மேலும் தன்னுடைய உடல் முழு தகுதியோடு இருப்பதாக உணரவில்லை என்றும் பேசியுள்ளார்.
இந்தியா நாளை மறுநாளில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் ஆள் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. அவருக்கு பதில் ரவீந்தர் ஜடேஜா ஆல்ரவுண்டர் இடத்தை நிரப்பி உள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து பாண்டியா பேட்டி அளித்து இருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் ''என்னை யாரும் ஓய்வு எடுக்கம்படி கூறவில்லை. நானே தான் ஓய்வு அளித்துக் கொண்டேன். நான் முழு உடல் தகுதியோடு இருப்பதாக உணரவில்லை'' என்றார். மேலும் ''வீட்டில் இருந்து மீண்டும் என்னுடைய உடலை போட்டிக்கு தகுந்த மாதிரி மாற்ற போகிறேன்'' என்று கூறினார்.
மேலும் அவர் டெஸ்ட் தொடரில் மட்டுமே பங்கு பெற மாட்டார். இலங்கைக்கு எதிராக டிசம்பரில் நடக்கும் ஒருநாள் தொடரில் கண்டிப்பாக இருப்பார் என்று கூறப்படுகிறது. அதற்குள் தன்னுடைய பழைய பிட்னஸை அவர் அடைவார் என எதிர்பார்க்கலாம்.