மும்பை: புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் நல்ல உறவு இருக்கும் என நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு மும்பையில் இன்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி நிருபர்களை சந்தித்தார். அப்போது ரவி சாஸ்திரியும் உடனிருந்தார்.
கோஹ்லி கூறியதாவது: நானும் சாஸ்திரியும், மூன்று வருடங்களுக்கு மேலாக ஒன்றாக இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ளோம். எங்களுக்குள் இனிமேல் புரிதல்களுக்கு அவசியம் தேவைப்படாது. எங்களுக்கு எது தேவை என்பது தெரியும். அதை அடைய இணைந்து முயல்வோம். இதற்காக தனிப்பட்ட முயற்சி தேவைப்படாது.
கடந்த சில நாட்களாக நடைபெற்ற சம்பவங்களால் எனக்கு எந்த நெருக்கடியும் கிடையாது. ஒரே அணியாக இணைந்து வெற்றிக்காக உழைக்க உள்ளோம். அனைவருமே கடினமான சூழல்களை கடந்து வந்திருப்போம். இதை வைத்து கூடுதல் நெருக்கடியை எனக்கு ஏற்படுத்திக்கொள்வதில் நம்பிக்கையில்லை. நான் கேப்டனாக எனது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட உள்ளேன் என்றார் கோஹ்லி.
கும்ப்ளே உடனான மோதல் குறித்து நேரடியாக நிருபர்கள் கேள்வி கேட்கவில்லை. அதேநேரம் கோஹ்லி கூறுகையில், புரிதலும், தகவல் பரிமாற்றமும் அனைத்து இடங்களுக்கும் தேவை. அது கிரிக்கெட்டில் மட்டும் கிடையாது. நமது சொந்த வாழ்க்கையில் கூட அது முக்கியம் என்றார்.