கொழும்பு: ஆஸ்திரேலியாவை அலற வைத்து அடித்து நொறுக்கிய இலங்கை வீராங்கனை சமாரி அத்தபத்து ஜெயங்கனி, தான் ஒரு ஜெயசூர்யாவை போலும், குமார் சங்ககாராவை போலும் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மகளிர் உலக கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 178 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தவர் சமாரி.
இது மகளிர் ஒருநாள் போட்டிகளில் 3வது அதிகபட்ச தனிநபர் ரன் எண்ணிக்கையாகும். மேலும் அணி எடுத்த மொத்த 257 ரன்களில் 178 ரன்கள் பங்களிப்பு என்பது அதிகபட்ச பங்களிப்பு என்ற வகையில் முதலிடம் பெறுகிறது. இதன் மூலம் மொத்த ரன் எண்ணிக்கையில் 69.26% பங்களிப்பு செய்து சாதனை புரிந்துள்ளார் இந்த வீராங்கனை.
அணியின் பிற வீராங்கனைகள் பங்களிக்காத நிலையில் இந்த ஸ்கோரை ஆஸ்திரேலியா சேஸ் செய்துவிட்டது. போட்டிக்கு பிறகு பேட்டியளித்த சமாரி அத்தபத்து ஜெயங்கனி கூறியதாவது: நான் சங்ககாராவை போல பேட்டிங்கை ஸ்டெடியாக ஆரம்பித்தேன். ஜெயசூர்யாவை போல முடித்தேன்.
35 ஓவர்வரை சிங்கிள்கள் ஓடுவதில் கவனம் செலுத்தியதாகவும், பிறகு தூக்கியடிப்பதில் கவனம் செலுத்தியதாகவும் கூறுகிறார் இவர் இவர் 143 பந்துகளில் 178 ரன்கள் எடுத்தார். அதில் 22 பவுண்டரிகள், ஆறு சிக்சர்கள் அடங்கும்.