அஹமதாபாத்: இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நிச்சயமாக இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்று யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகமதாபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் பாபா ராம் தேவ். அப்போது அவர் கூறுகையில், " இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பது வெறும் விளையாட்டுப் போட்டியாக இரண்டு நாட்டிலும் பார்க்கப்படுவதில்லை. அதில் வெல்வதை இரண்டு நாட்டினருமே பெருமையாகக் கருதுகிறார்கள். அதனால் நிச்சயம் இந்தியா வெல்லும் " என்றார்.
இதற்கிடையில், இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்லவேண்டும் என்று இந்திய அளவில், ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
கான்பூரில் உள்ள பாலாஜி கோவிலில் முஸ்லீம், இந்து மதத்தினர் இணைந்து இந்தியாவின் வெற்றிக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்துள்ளனர்.
அந்தப் பிரார்த்தனை குறித்து ரசிகர் ஒருவர் கூறுகையில், " இதுதான் இந்தியா பாகிஸ்தானை மீண்டும் வெற்றி பெற உள்ள தருணம். நிச்சயமாக இந்திய வீரர்கள் அபரிமிதமான திறன்களோடு விளையாடி பாகிஸ்தானை வெற்றி கொண்டு, கோப்பையைக் கைப்பற்றி தாயகம் திரும்புவார்கள்" என்றார்.
இந்தப் பூஜையை செய்த பூஜாரி கூறுகையில், இந்தப் பிரார்த்தனை எதற்காக என்றால், அணியின் வீரர்கள் நன்கு விளையாடவும் , இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் நலனுக்காகவும்தான் செய்யப்படுகிறது என்று கூறினார்.
வாரணாசியில் உள்ள இஸ்லாமியர்கள் புனித ரம்ஜான் மாதமான இந்த நேரத்தில், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை வெல்ல வேண்டும் என்று சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளனர்.
இன்று வரை ஐசிசி சாம்பியன் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை அதிக அளவில் தோற்கடித்துள்ளது. எனவே, இந்த முறையும் பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்ணைக் கவ்வும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.