டெஸ்ட் கிரிக்கெட்டின் நிலை
ஒருகாலத்தில் வாரக்கணக்காக டிவி முன்பு உட்கார்ந்து டெஸ்ட் போட்டிகள் பார்த்த நிலை இருந்திருக்கிறது. கிரிக்கெட்டின் பொன்னான காலம் என்றழைக்கப்பட்ட அந்தச் சமயத்தில் டிரா ஆகும் போட்டியை கூட விழுந்து விழுந்து பார்க்கும் நபர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் டி-20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் கொஞ்சம் கொஞ்சமாக டெஸ்ட் போட்டி பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இந்தியாவில் ஐபிஎல் வந்த பின் டெஸ்ட் போட்டிகளில் ஸ்கோர் கேட்பதுடன் ரசிகர்கள் நிறுத்திக் கொண்டனர்.
இன்றைய கூட்டத்த்தில் முடிவு
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளை மறுபடியும் பிரபலப்படுத்தும் நோக்கில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்தது. பல காலமாக வெறும் கனவாகவே இருந்த இந்தத் திட்டம் தற்போது செயல் வடிவம் பெற இருக்கிறது. அதன்படி இன்று நடக்கும் ஐசிசி கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட இருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்தது ஐசிசி.
டெஸ்ட் போட்டிகள் 2019ல் இருந்து தொடங்கும்
இன்று இதற்கான இறுதி கூட்டத்தை நடத்திய ஐசிசி, அதில் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. அதன் படி சர்வதேச முதல் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிகள் 2019 ஆண்டில் தொடங்கும் என அறிவிக்கப்ட்டுள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 9 அணிகள் விளையாடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டு வருடம் நடக்கும்
இந்த டெஸ்ட் சாம்பியன் ஷிப் குறித்து விரிவாக விளக்கி உள்ளது ஐசிசி தரப்பு. அதன்படி சர்வதேச டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியானது இரண்டு வருடத்திற்கு தொடர்ந்து நடக்கும். இது மிகவும் நீளமான தொடர் என தெரிவித்துள்ளது. இதில் 9 அணிகள் பங்குபெறும். மேலும் டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் டெஸ்ட் போட்டியின் நாட்கள் 4 என குறைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு அணி 6 போட்டிகளில் விளையாடும், அதில் 3 போட்டிகள் வெளியூரில் விளையாடும் என்று கூறியுள்ளது. அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் லீக் போட்டிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 13 அணிகள் விளையாடும் எனவும், இது ஒருநாள் உலகக் கோப்பைக்கான ஆயத்தப் போட்டியாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.