துபாய்: டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களின் கட்டமைப்பை மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐசிசி திட்டப்படி, இரு நாடுகள் மோதும், ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்கு பதிலாக மேலும் ஓரிரு, நாடுகளையும் சேர்த்துக்கொண்டு லீக் மாதிரியிலான போட்டிகளை நடத்தலாம். இதன் மூலம், பல நாடுகளின் ரசிகர்களும் அப்போட்டித் தொடரை பார்ப்பதால் வருவாய் அதிகரிக்கும். போட்டித்தொடர் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.
டெஸ்ட் விளையாடும் நாடுகளுடன் மேலும் பல குட்டி நாடுகளையும் டெஸ்ட் விளையாடும் நாடுகள் என்ற அந்தஸ்துக்கு தரம் உயர்த்தவும் ஐசிசி திட்டமிட்டுள்ளது. அதேநேரம், குட்டி நாடுகள் அவர்களுக்குள் மோதிக்கொள்ளும் வகையில் போட்டிகள் அமைக்கப்படும். டெஸ்ட் ஆடும் அங்கீகாரம் கொண்ட நாட்டு அணிகள் அந்த குட்டி அணிகளுடன் மோதமுடியாது. இதன்மூலம், போட்டியின் சுவாரசியம் பாதுகாக்கப்படும்.
மண்டல அளவில் டி20 போட்டிகளையும் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு பிசிசிஐ தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐ முடிவை கேட்டறியாமல் இவ்வாறு ஐசிசி முடிவெடுத்துள்ளதாகவும், இதனால் பிசிசிக்கு இழப்பு ஏற்படும் என்பதும் பிசிசிஐ கருத்து. பிசிசிஐ தற்போது சுப்ரீம்கோர்ட் வழிகாட்டுதல் படியிலான நிர்வாகிகளால் வழிநடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.