இதை ஏற்றுக் கொள்கிறேன்
நேற்று இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. நியூசிலாந்தின் 197 ரன் இலக்கை அடிக்க முடியாமல் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி பேசும் போது "இந்த தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன். இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் இந்த போட்டியில் சரியாக விளையாட வில்லை. இது எங்களுடைய தவறுதான்" என்று கூறினார்.
பிறந்தநாள் விழா
இந்த நிலையில் இன்று 29 வயதை அடையும் இந்திய கேப்டன் கோஹ்லி தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். நேற்று போட்டியை முடித்துவிட்டு ஹோட்டல் அறைக்கு சென்ற இந்திய வீரர்கள் விராட் கோஹ்லிக்கு கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் அவரது முகம் , தலை என அனைத்து இடங்களிலும் கேக்கை பூசி ஜாலியாக பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்கள். இந்த புகைபபடங்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
காபி வித் கோஹ்லி
இந்த நிலையில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு முன்பு கோஹ்லி ''காபி வித் சாம்பியன்ஸ்'' என்ற நிகழ்வில் கலந்து கொண்டார். கவுரவ் கப்பூர் என்ற பிரபல தொகுப்பாளருடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோஹ்லி முதல்முறையாக கலந்து கொண்டு இருக்கிறார். அவரிடம் அவரது காதல் குறித்து, அவரது பிட்னஸ் குறித்து, டோணிக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் நெருக்கம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
எப்போது ஓய்வு
இந்த நிலையில் முழு பார்மில் இருக்கும் அவரிடம் அவர் ஓய்வு பெறும் நாள் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்வியை மிகவும் இயல்பாக எதிர்கொண்ட கோஹ்லி "நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது என் உடலுக்கு நன்றாக தெரியும். என் உடல் போதும் என்று கூறும் நாளில் கண்டிப்பாக நான் அணியை விட்டு சென்றுவிடுவேன். முக்கியமாக என்னுடைய கிரிக்கெட் ஆசை எப்போது குறைகிறதோ அப்போது நான் ஓய்வு பெறுவேன்" என்று கூறினார்.