கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.
இலங்கைக்கு எதிராக, காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, தற்போது கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், இரண்டாவது டெஸ்டில் இலங்கையை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த டெஸ்டை போலவே டாஸ் வெற்றி பெற்றது இம்முறையும் இந்திய அணிக்கு நன்கு பலனளித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பட்டையை கிளப்பினர். புஜாரா 133, ரஹானே 132 ஆகியோர் சதம் விளாசினர். ராகுல், சஹா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அரை சதம் கடந்தனர். இன்று தேனீர் இடைவேளைக்கு பிறகு இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அப்போது 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்களை குவித்திருந்தது இந்தியா.
ரங்கனா ஹீரத் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து இலங்கை தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. கடந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 600 ரன்களை குவித்து ஆல்அவுட்டானது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. தினேஷ் சண்டிமால், குஷால் மென்டிஸ் களத்தில் உள்ளனர். இலங்கையின் இரு விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார். நாளை 3வது நாள் ஆட்டம் தொடர்கிறது.