கோல்கத்தா: இலங்கைக்கு எதிராக, உள்நாட்டில் நடந்த டெஸ்ட் மற்றும் டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்தித்ததில்லை என்ற சாதனையை தொடரும் முனைப்புடன் இந்திய கிரி்க்கெட் அணி கோல்கத்தாவில் களமிறங்குகிறது.
மூன்று டெஸ்ட்கள், மூன்று ஒருதினப் போட்டி, மூன்று டி-20 போட்டித் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி வந்துள்ளது. டெஸ்ட் போட்டித் தொடர், கோல்கத்தாவில் 16ம் தேதி துவங்குகிறது.
கடந்த, 2015ல், இலங்கைக்கு எதிராக இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, தொடர்ந்து, எட்டு டெஸ்ட் போட்டித் தொடரை வென்று, உலகத் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தாண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், இலங்கைக்கு பயணம் செய்த இந்திய அணி, 3 டெஸ்ட்கள், 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் என, அனைத்திலும் வென்று, ஒயிட்வாஷ் செய்தது.
இந்தியாவும் இலங்கையும் இதுவரை 15 முறை டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி உள்ளன. அதில் இந்தியா 8 முறையும் இலங்கை 3 முறையும் வென்றுள்ளன. 4 முறை தொடர் டிராவில் முடிந்துள்ளது.
இலங்கையில் நடந்துள்ள 8 தொடர்களில், இரு அணிகளும் தலா 3 முறை வென்றுள்ளன. இரண்டு தொடர்கள் டிராவுில் முடிந்தன. இந்தியாவில் நடந்துள்ள 7 தொடர்களில், 5 தொடர்களில் இந்தியா வென்றுள்ளது. இரண்டு டிராவில் முடிந்துள்ளது. 1982ல் துவங்கி, இதுவரை இந்தியாவில் நடந்துள்ள 17 டெஸ்ட் போட்டிகளில் 10ல் இந்தியா வென்றுள்ளது. 7 டிராவில் முடிந்துள்ளது. ஒரு போட்டியில் கூட இலங்கை வென்றதில்லை.
கடைசியாக, 2009ல் இந்தியாவில் நடந்த 3 போட்டித் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது. இலங்கைக்கு எதிராக இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்றதில்லை என்ற சிறப்பை தொடர்ந்து தக்க வைக்க, இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.