இஸ்லாமாபாத்: இந்திய அணி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட பயப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகர்யார் கான் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. வருவாய் இழப்பில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ, இந்தியாவுடன் போட்டித்தொடர் நடந்தால் நல்ல வருவாய் பார்க்கலாம் என்ற ஆவலில் உள்ளது.
ஆனால் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடத்தப்போவதில்லை என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பட்டம் வென்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகர்யார் கான், பாகிஸ்தான் வெற்றி பெற்ற பிறகு, இங்கு வந்து எங்களுடன் இரு தரப்பு தொடரில் விளையாடுமாறு இந்தியாவுக்கு சவால் விடுத்தோம்.
ஆனால் இந்திய அணி விளையாட முன்வரவில்லை. நம்மை அவர்கள் பயப்படுகிறார்கள். இதனாலேயே நாங்கள் ஐசிசியால் நடத்தப்படும் தொடர்களில் மட்டுமே உங்களுக்கு (பாகிஸ்தானுக்கு) எதிராக விளையாடுவோம் என்று இந்தியா தெரிவித்துவிட்டது. மேலும் இரு தரப்பு தொடரிலும் விளையாட மறுப்புத் தெரிவித்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார். 2012-2013-ம் ஆண்டுக்குப் பிறகு, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் இங்கு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.