லண்டன்: மகளிர் கிரிக்கெட் உலக கோப்பைக்கான இறுதிப் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
11-வது பெண்கள் உலக கோப்கை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.
லீக் சுற்றின் முதல் நான்கு போட்டிகளில் இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள், இலங்கை அணிகளை வீழ்த்தியது இந்தியா. அடுத்து நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடான போட்டியில் தோல்வியை சந்தித்தது. எனினும் அடுத்து நடந்த நியூசிலாந்து அணியுடான போட்டியில் அந்த அணியை வீழ்த்தி துவம்சம் செய்தது இந்தியா.
இதையடுத்து அரையிறுதியில் 6 முறை சாம்பியனான பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா. இந்நிலையில் கோப்பைக்கான இறுதிப் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பவுலிங் என சம பலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கை பொறுத்த வரை மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர், பூணம் ரவுத், வேதா கிருஷ்ணமூர்த்தி கலக்கி வருகின்றனர். ஸ்மிருதி மந்தனா கடந்த சில போட்டிகளில் சோபிக்க வில்லை அவர் பார்மிக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பவுலிங்கில் கோஸ்வாமி, தீப்தி சர்மா, பூனம் யாதவ், பாண்டே ஆகியோர் அசத்தி வருகிறார்கள்.
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோற்றாலும் அதன் பிறகு 7 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்காமல் ஆடி வருகிறது. பலம் வாய்ந்த அந்த அணியில் வின்பீல்டு, சகரா டெய்லர், பியூமான்ட், வில்சன் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகவும் 3 முறை சாம்பியனான இங்கிலாந்து 4-வது தடவையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்தியா இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்பது துயரமானது. கடந்த 2005ம் ஆண்டு இறுதிப் போட்டி வரை இந்தியா முன்னேறி அசத்தியது. ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது. ஆனால் இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.