இன்று இறுதிப்போட்டி
லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் இடையே சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. போட்டியில் பாகிஸ்தானை வெல்ல இந்தியா தயார் நிலையில் உள்ளது.
எப்போதும் போலவே நாங்க தயார்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், "எங்களை பொறுத்தவரை இறுதிப் போட்டியை மற்றொரு சாதாரண ஆட்டமாக நினைத்து விளையாடுவோம். எப்போதும் போலவே இந்த ஆட்டத்திற்கும் தயாராகி உள்ளோம்.
நெருக்கடியை சமாளிக்க தெரியும்
பாகிஸ்தானுடன் விளையாடும்போது நெருக்கடி வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்பது தெரியும். அதற்குரிய அனுபவம் எங்களிடம் இருக்கிறது. நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், மைதானத்திற்குள் நுழையும் போது இந்த விஷயங்களை பற்றி எல்லாம் சிந்திக்க முடியாது.
முந்தைய வெற்றி இன்று கைகொடுக்குமா
முதலாவது லீக்கில் நாங்கள் பாகிஸ்தானை வீழ்த்தினோம். அந்த ஆட்டத்தின் தாக்கம் இங்கு எதிரொலிக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் தொடரை குறிப்பிட்ட அணி எப்படி தொடங்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.
நம்பிக்கையோடு தொடங்கும் அணி சோடை போகிறது
சில அணிகள் நம்பிக்கையுடன் சிறப்பாக தொடங்கும். கடைசியில் சோடை போய் விடும். சில அணிகளின் தொடக்கம் தடுமாற்றமாக இருக்கும். அதன் பிறகு அதிசயத்தக்க வகையில் மீண்டு வந்து விடும். அதற்கு பாகிஸ்தான் அணியே உதாரணம்.
முந்தைய சாதனைகள் பொருட்டே இல்லை
அதனால் முந்தைய வெற்றிகள், சாதனைகள் ஒரு பொருட்டே இல்லை. தங்களுக்குரிய நாளாக அமைந்தால் உலகின் எந்த அணியையும் பாகிஸ்தானால் தோற்கடிக்க முடியும். அத்தகைய திறமை அவர்களிடத்தில் இருக்கிறது என்பதை அறிவோம்.
நம் மீது நம்பிக்கை வைப்போம்
இது போன்ற பெரிய போட்டிகளுக்கு தயாராவதற்கு முதலில் நம் திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கவனச்சிதறலை தவிர்க்க, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை பார்ப்பதை தவிர்க்கிறேன்.
120 சதவீத திறமையை வெளிப்படுத்துவோம்
இறுதிப்போட்டி, சவால்மிக்கதாக இருக்கப் போகிறது. இரு அணிகளும் கோப்பையை வெல்ல விரும்பும். எனவே அனைத்து வீரர்களும் தங்களது 120 சதவீத திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்." என்றார் கோஹ்லி.