தொடர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய மற்றும் இந்தியாவுக்கு இடையே கடந்த ஒருமாதமாக ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் நடை பெற்று வருகின்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. ஆஸ்திரேலிய அணியை 4-1 நேர கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதல் இடம் பெற்றது. அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20யிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சாஹல் மற்றும் குலதீபின் ஆட்டம் பாராட்டப்பட்டது.
கெளஹாத்தி டி-20
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி-20 போட்டி இரண்டு நாட்களுக்கு முன் கெளஹாத்தியில் நடைபெற்றது. போட்டியின் தொடக்கத்திலிருந்தே இந்தியா திணறி வந்தது. இந்திய அணியின் கேப்டன் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். ஆஸ்திரேலிய பவுலர்கள் மிகவும் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா நிர்ணயித்த 119 என்ற ரன்னை மிக எளிதாக அடித்து ஆஸ்திரேலியா அணி அபாரமாக வென்றது. இந்த வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்களின் பஸ்ஸில் கல் வீச்சு
இந்த நிலையில் போட்டி முடித்து ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது சில மர்ம நபர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பஸ்ஸின் மீது எதிர்பாராத விதமாக கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால அவர்கள் சென்ற பஸ்ஸின் கண்ணாடி உடைந்தது. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.
|
வித்தியாசமான முறையில் மன்னிப்பு கோரினர்
இந்த மோசமான தாக்குதல் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்திய அணியின் கோஹ்லி, மிதாலி ராஜ், அஸ்வின், நெஹ்ரா என அனைவரும் இதற்கு வருத்தம் தெரிவித்திருந்தனர். ஆஸ்திரேலிய ஊடகங்களில் இது குறித்து விரிவாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு எழுதப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்திய ரசிகர்கள் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளனர். ஆஸ்திரேலிய அணி தங்கி இருக்கும் அறைக்கு வெளியே கையில் "சாரி" என்று எழுதியிருக்கும் பலகையுடன் நின்று கொண்டிருந்தனர். இன்னும் சிலரின் பலகையில் ''அந்த சம்பவத்திற்காக மன்னித்து விடுங்கள்'' என்றும் எழுதப்பட்டு இருந்தது.
இந்திய அணி ரசிகர்களின் இந்தச் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. ஆஸ்திரேலிய ஊடகங்களிலும் இந்தச் செய்தி வந்துள்ளது.