ராஜ்கோட்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்கும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி தற்போது குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில்40 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டி இந்திய அணி அதிரடியாக ஆடி 202 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் டார்கெட்டை எடுக்க முடியாமல் நியூசிலாந்து 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில் இரு அணிகளும் மோதிய இரண்டாவது டி-20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது.
இந்திய அணியில் இருந்து ஓய்வுபெற்ற நெஹ்ராவுக்கு பதில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி மிகவும் சிறப்பாக ஆடியது. நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிரடியாக ஆடினார்கள். முன்ரோ சிறப்பாக ஆடி 109 ரன்கள் எடுத்தார். முகமது சிராஜ் மற்றும் சஹல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. 197 ரன்கள் இலக்கை விரட்ட ஆரம்பித்த இந்தியாவின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் 1 ரன்னிலும், ரோகித் ஷர்மா 5 ரன்னிலும் விரைந்து அவுட்டாகி ஷாக் கொடுத்தனர்.
இதனால் தடுமாறிய இந்தியாவை விராட் கோஹ்லியின் சிறப்பான பேட்டிங் சற்று தலைநிமிரச் செய்தது. ஆனால் மறுமுனையில் அதிரடியாக யாருமே ஆடாததால் ரன்ரேட் கூடிக்கொண்டே சென்றதால், பொறுமை இழந்த கோஹ்லி, அதிரடியாக ஆட முற்பட்டபோது 65 ரன்களில் அவுட்டானார். 42 பந்துகளில், 8 பவுண்டரி, 1 சிக்சருடன் இந்த ரன்களை அவர் எடுத்திருந்தார்.
இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.
டோணி ஆரம்பத்தில் பந்துகளை அடிக்க சிரமப்பட்டபோதிலும் இறுதியில் சற்று அதிரடி காட்டினார். ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிப்போய்விட்டது. அவர் கடைசி ஓவரில் அவுட்டானார். 37 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரி உதவியுடன் 49 ரன்கள் எடுத்திருந்தார் டோணி. நியூசி தரப்பில் டிரென்ட் பௌல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சான்ட்னர், சோடி மற்றும் முர்னோ தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
திருவனந்தபுரத்தில் 7ம் தேதி நடைபெற உள்ள 3வது டி20 போட்டிதான் தொடரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க உள்ளது.