நம்பர் ஒன் இந்தியா
இந்திய அணிகுறித்து தவான் கூறுகையில் "அனைத்து விதமான ஆட்டங்களிலும் மிகவும் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணிதான் தற்போது உலகிலேயே மிகச்சிறந்த அணியாக இருக்கிறது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் இந்திய அணி சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது. அதேபோல் நீண்ட நாட்களாக டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிதான் முதல் இடத்தில் இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியாவை முதல் டி-20யில் வென்றதன் மூலம் அந்தத் தரவரிசையிலும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.'' என்றார்.
கோஹ்லிதான் பெஸ்ட்
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் கோஹ்லி பற்றி பேசிய தவான் "தொடர்ச்சியாக ஒன்பது போட்டிகளில் வென்று சிறந்த சாதனையை தனது கை வசம் வைத்திருந்தார் டோணி. டோணியைப் போலவே கோஹ்லியும் தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் வென்றுள்ளார். அணி சரியாக விளையாடி இருந்தால் அவர் தனது பத்தாவது போட்டியிலும் வெற்றி பெற்றிருப்பார். அந்த புதிய சாதனை மிகச்சில இடைவெளியில் கை நழுவிப் போய்விட்டது. உலகிலேயே இப்போது கோஹ்லிதான் சிறந்த கேப்டனாக இருக்கிறார்" என்றார்.
பெஸ்ட் பவுலர்கள்
அதேபோல் அவர் இந்திய அணியில் புதிதாக இடம் பெற்றிருக்கும், ஸ்பின் இரட்டையர்கள் என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் சாஹல் மற்றும் குல்தீப் குறித்தும் பேசினார். ''இந்திய அணி இதுவரை பார்த்த பவுலர்களிலேயே இவர்கள் இருவரும் மிகச்சிறந்த பவுலர்கள் ஆவர். இந்திய அணியின் எதிர்காலம் இவர்களின் கையில் தான் இருக்கிறது'' என இவர்கள் பற்றி கூறினார்
பழைய ஆஸ்திரேலியா போல விளையாட வேண்டும்
இந்த நிலையில் அவர் இந்திய அணியின் எதிர்காலம் குறித்தும் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். "இந்திய அணி பழைய ஆஸ்திரேலிய அணியைப்போல் விளையாட வேண்டும். ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங் ஆகியோர் இருந்த, அசைக்க முடியாத ஆஸ்திரேலிய அணியைப் போல் விளையாட வேண்டும். அதற்கான தூரம் அதிகமாக இல்லை. விரைவில் நாம் அதுபோல ஒரு அணியாக மாறுவோம் " என்கிறார் நம்பிக்கையாக.