அணியில் சேர்க்கப்படாத அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின் பவுலர்களில் ஒருவர் அஸ்வின். இவர் சில நாட்களுக்கு முன்பு வரை இந்திய கிரிக்கெட் அணியில் டோணியின் வலது கையாக செயல்பட்டு வந்தார். அணியில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட அஸ்வின் நீண்ட காலத்திற்கு நம்பர் ஒன் சுழற் பந்து வீச்சாளராக திகழ்ந்தார். ஐசிசியின் தரவரிசையில் முதல் இடம், டி-20 சிறப்பான ஆட்டம் என முழு பார்மில் இருந்தார். இந்த நிலையில் அணியின் கேப்டனாக கோஹ்லி பொறுப்பேற்றதை அடுத்து, இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. அணியின் முக்கிய பவுலரான அஸ்வின் வெளியேற்றப்பட்டார்.
அணியில் சேர்வேன் என நம்பிக்கை
அஸ்வின் வெளியேறிய பின் இந்திய அணியில் புதிய ஸ்பின் பவுலர்களைக் களம் இறக்கும் முடிவில் இறங்கினார் கோஹ்லி. அஸ்வினுக்கு பதிலாக சாஹல், குல்தீப் என்ற இரு புதிய சுழற்பந்து வீச்சாளர்களைக் அறிமுகப்படுத்தினார். இந்த இருவருமே இப்போது அணியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் "நான் இதுவரை மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறேன் , எனக்கு அணியில் விரைவிலேயே வாய்ப்பு கிடைக்கும்'' என அஸ்வின் நம்பிக்கையாக பேசியிருந்தார்.
யோ யோ டெஸ்ட் முறை
இந்திய அணியில் விளையாடுவதற்கு பெரும்பாலும் நிறைய வித்தியாசமான உடல் தகுதித் தேர்வுகள் வைக்கப்படும். யோ யோ தேர்வு என அழைக்கப்படும் இந்த பிட்னஸ் தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். இதில் செய்யப்படும் அனைத்து விதமான உடல் சோதனைகளையும் கடந்து மீண்டும் அணியில் இணைவது என்பது பழைய வீரர்களுக்கு மிகவும் கடினமான செயலாகும். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள ஓடுபாதையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் , கொஞ்சம் கொஞ்சமாக வேகமாக ஓடவேண்டும். இந்த டெஸ்டின் சரியாக ஓட முடியாதவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது. கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இந்த டெஸ்ட் மிகவும் கடினமான ஒன்றாகும்.
|
யோ யோ டெஸ்ட்டில் கலக்கினார்
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த யோ யோ டெஸ்டை இந்திய அணியின் பவுலர் நெஹ்ரா மிகவும் சிறப்பாக முடித்திருந்தார். மேலும் அதன்முலம் அவருக்கு அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் நேற்று பெங்களூரில் நடந்த இந்த டெஸ்ட்டில் தமிழக வீரர் அஸ்வினும் கலந்து கொண்டார். இதில் மிகவும் சிறப்பாக பர்பார்ம் செய்த அஸ்வின் மொத்த டெஸ்ட்டையம் முழுவதுமாக முடித்தார். இது குறித்து அவர் டிவிட்டரில் பெருமையாக எழுதியுள்ளார்.