நெஹ்ரா விளையாடும் கடைசி ஐசிசி ஆட்டம்
நவம்பர் 1ம் தேதி நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியே இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவரான நெஹ்ராவின் கடைசி ஆட்டம் ஆகும். இந்த போட்டியில் இருந்து அவர் அனைத்து விதமான ஐசிசி போட்டிகளில் இருந்தும் விடைபெறுகிறார். இந்த கடைசி போட்டியில் அவர் இந்திய கேப்டன் கோஹ்லியின் தலைமையின் கீழ் அவரது சொந்த மண்ணான டெல்லியில் விளையாடுகிறார். இது குறித்து ஏற்கனவே அவர் மிகவும் உணர்ச்சிகரமாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் தனிக்காட்டு ராஜா
நெஹ்ரா விளையாடும் இந்த ஆட்டம் அவரது கடைசி ஆட்டம் என்பதையும் தாண்டி நிறைய முக்கியதுவத்தை பெற்றுள்ளது. அதன்படி தற்போது இந்திய அணியில் விளையாடும் பிளேயர்களில் மிகவும் சீனியர் பிளேயர் இவர் மட்டுமே ஆவார். டெல்லி டி-20 போட்டியில் மைதானத்தில் விளையாடும் வீரர்களில் இவர் மட்டுமே 90 களில் அறிமுகம் ஆன பிளேயர் ஆவார். மற்ற அனைத்து பிளேயர்களும் 2000 திற்கு பின் இந்திய அணிக்கு வந்தவர்கள் ஆவர். நெஹ்ரா இந்திய அணியில் 1999ல் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
அதிக கேப்டன்களுக்கு கீழ் விளையாடியவர்
இந்திய அணியில் தற்போது விளையாடும் பிளேயர்களில் அதிக கேப்டன்களுக்கு கீழ் விளையாடிய பிளேயர் நெஹ்ரா மட்டுமே ஆவர். இவர் முதலில் அசாருதீன் தலைமையின் கீழ் அறிமுகம் ஆனார். அடுத்து முன்னாள் கேப்டன் கங்குலியின் கீழ் விளையாடினார். அந்த சமயத்தில் அவர் கங்குலியின் செல்லப் பிள்ளையாகவே இருந்தார். அதற்கு அடுத்து அவர் டிராவிட்டின் தலைமையின் கீழ் விளையாடினார். அதன் பின் அணில் கும்ப்ளே தலைமையின் கீழ் விளையாடினார். கம்பிர் கேப்டனாக இருந்த போதும் இவர் அணியில் இருந்திருக்கிறார். அடுத்ததாக டோனியின் கீழ் உலகக் கோப்பையில் விளையாடினார். தற்போது கடைசி போட்டியாக கோஹ்லியின் கீழ் விளையாடுகிறார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் கங்குலியின் தலைமுறைக்கும், கோஹ்லியின் தலைமுறைக்கும் சிறந்த இணைப்பு பாலமாக இவர் விளங்கி இருக்கிறார்.
முதல் போட்டியும் கடைசி போட்டியும்
டெல்லியில் நடக்க இருக்கும் இந்த போட்டிதான் நெஹ்ராவின் கடைசி சர்வதேச போட்டியாகும். ஆனால் அன்று நடக்கும் இதே போட்டிதான் மற்ற இரண்டு வீரர்களுக்கு முதல் சர்வதேச போட்டியாகும். இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு இந்த போட்டிதான் முதல் ஐசிசி போட்டியாகும். ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி உள்ள இவர்கள் தற்போது இந்திய அணிக்காக விளையாட இருக்கின்றனர். ஒருவருக்கு கடைசி போட்டியும், இருவருக்கு முதல் போட்டியும் டெல்லியில் ஒரே நாளில் நடக்க இருக்கிறது.