கொல்கத்தா: கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை நடந்த 14வது லீக் போட்டியில் கொல்கத்தா-ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் 'டாஸ்' வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் முதலில் 'பீல்டிங்' தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணி பேட் செய்தது.
கொல்கத்தா அணியில் பியூஸ் சாவ்லாவுக்கு பதிலாக குல்தீப் அணிக்கு திரும்பினார். ஹைதராபாத் அணியில் முஸ்தபிசுர், சங்கர் ஆகியோருக்கு பதிலாக ஹென்ரிக்ஸ், பிபூல் சர்மா சேர்க்கப்பட்டனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 39 பந்துகளில் 68 ரன்களும், மணீஷ் பாண்டே 35 பந்துகளில் 46 ரன்களும் விளாசினர். யூசுப் பதான் ஆட்டமிழக்காமல் 21 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் தரப்பில், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய ஹைதராபாத் அணி முதல் பத்து ஓவர்களில் வேகமாக ரன்குவிக்க திணறியது. தொடக்க வீரர்களான வார்னர் 26 ரன்களிலும், தவான் 26 ரன்களிலும் வெளியேறினர். ஹென்ரிகஸ், தீபக் ஹூடா தலா 13 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக ரன் சேர்த்த யுவராஜ் சிங் 16 பந்துகளில், 2 சிக்சர், 2 பவுண்டரிகள் உட்பட 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 17 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றியை ஈட்டியது.