கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஐபிஎல் 23வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாசில் வென்ற குஜராத் கேப்டன் ரெய்னா ஃபீல்டிங் தேர்ந்தெடுத்தார். இதையடுத்து கொல்கத்தா அணி பேட் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.
ராபின் உத்தப்பா 72, சுனில் நரைன் 42 (17 பந்துகளில் 9 பவுண்டரிகள், 1 சிக்சர்), கேப்டன் கம்பீர் 33 ரன்கள் விளாசினர்.
188 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் லயன்ஸ் அணி 5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்ச் 31 ரன்களில் வெளியேறிய நிலையில், பிரெண்டன் மெக்கல்லம் 27, கேப்டன் ரெய்னா 2 ரன்களுடன் களத்தில் நின்றிருந்தனர். மழை நின்றதும் ஆட்டம் தொடர்ந்தது.
மெக்கல்லம் 33, தினேஷ் கார்த்திக் 3, இஷாந்த் கிஷன் 4, ட்வைன் ஸ்மித் 5 ரன்களில் வெளியேறினர். இருப்பினும் கேப்டன் ரெய்னா மறுமுனையில் அபாரமாக ஆடி 46 பந்துகளில், 84 ரன்களை குவித்ததால் குஜராத் அணி, 19வது ஓவரின் 2வது பந்திலேயே வெற்றி இலக்கை எட்டியது. ஜடேஜா 19 ரன்களுடனும், பால்க்னர் 4 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
முன்னதாக, குஜராத் அணியில் ஆன்ட்ரூ டை மற்றும், ஷிவில் கவுசிக் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, ஜேம்ஸ் பால்க்னர் மற்றும் பிரவீன் குமார் அணியில் சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.