டெல்லி: இந்தியா - இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடர் வரும் 16ம் தேதி கோல்கத்தாவில் துவங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை வென்றால், கேப்டனாக அதிகப் போட்டிகளில் வெற்றி என்ற பட்டியலில் சவுரவ் கங்குலியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு கேப்டன் விராட் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது.
மூன்று டெஸ்ட்கள், மூன்று ஒருதினப் போட்டிகள், மூன்று டி-20 போட்டிகளில் விளையாட, இலங்கை கிரிக்கெட் அணி வந்துள்ளது. இதில் டெஸ்ட் போட்டித் தொடர், வரும் 16ம் தேதி கோல்கத்தாவில் துவங்குகிறது. நவ. 24ம் தேதி நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும், டிச. 2ல் டில்லியில் மூன்றாவது டெஸ்ட் போட்டியும் நடக்க உள்ளது.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தொடர்ந்து, எட்டு டெஸ்ட் போட்டித் தொடரை வென்று, உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. கடந்த, 2015ல், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. அதன் பிறகு, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இன்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை என அனைத்து டெஸ்ட் தொடரையும் வென்று மிகவும் வலுவாக உள்ளது இந்திய அணி.
இந்தாண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், இலங்கைக்கு பயணம் செய்த இந்திய அணி, 3 டெஸ்ட்கள், 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் என, அனைத்திலும் வென்று, ஒயிட்வாஷ் செய்தது.
இந்த நிலையில், மூன்று டெஸ்ட் போட்டித் தொடர் துவங்க உள்ளது. சவுரவ் கங்குலி கேப்டனாக 49 போட்டிகளில், 21 வெற்றிகளைப் பெற்றுள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றால், கங்குலியின் சாதனையை கோஹ்லி முறியடிக்க முடியும். கோஹ்லி கேப்டனாக இதுவரை 29 போட்டிகளில், 19ல் வென்றுள்ளார். இரண்டு போட்டிகளில் வென்றாலும், கங்குலியின் சாதனையை சமன் செய்ய முடியும்.
கேப்டனாக அதிக டெஸ்ட் வெற்றி என்ற பெருமை, கேப்டன் கூல், மகேந்திர சிங் டோணிக்கு உள்ளது. அவர், 60 போட்டிகளில், 27 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.