கொல்கத்தா: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் பந்தில் அவுட் ஆகியதன் மூலம் கே.எல் ராகுல் புதிய சாதனை படைத்து இருப்பதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இவர் 'சுரங்கா' பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இந்தியாவும் இலங்கையும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசி வருகிறது. ஷிகர் தவானும், கே.எல் ராகுலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களம் இறங்கினர்.
ஆனால் களம் இறங்கிய முதல் பந்திலேயே கே.எல் ராகுல் டக் அவுட் ஆனார். தற்போது இவர் தனது டக் அவுட் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார்.
இவரது சாதனை குறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் விளக்கினார். அதன்படி இந்திய அணியில் வி.வி.எஸ். லக்ஷ்மன், டபுள்யூ.வி ராமன், கவாஸ்கர் போன்ற சில பேட்ஸ்மேன்கள் மட்டுமே டெஸ்ட் போட்டியில் முதல் பந்தில் அவுட் ஆகி இருக்கின்றனர்.
தற்போது இந்த டக் அவுட்டின் மூலம் கே.எல் ராகுல் அந்த முக்கியமான லிஸ்டில் இணைந்து இருக்கிறார். இதுகுறித்து கவாஸ்கர் கூறும் போது ''எங்களுடைய கிளப்பில் இணைந்ததற்கு நன்றி'' என்றார். கவாஸ்கர் மட்டும் மூன்று முறை டெஸ்ட் போட்டிகளில் முதல் பந்தில் அவுட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.