தல’ தான் எங்களுக்கு எப்போதும் தல’
கொழும்பு: 300 ஒருதினப் போட்டிகளில் விளையாடுவது என்பது, தற்போது ஒரு படம், 100 நாட்களுக்கு தியேட்டரில் வெற்றிகரமாக ஒடுவதற்கு சமம். ஒரு சிலருக்கு மட்டுமே இது போன்ற வாய்ப்பு கிடைக்கும்.
கேப்டன் கூல் என்றழைக்கப்படும், உலகக் கோப்பை நாயகன் மகேந்திர சிங் டோணி, நேற்று விளையாடிய, 300வது ஒருதினப் போட்டியை மறக்க முடியாத நாளாக மாறியது.
300 போட்டிகளில் விளையாடும், 6வது இந்திய வீரரான டோணி, நேற்றைய போட்டியில், 49 ரன்கள் நாட்-அவுட் எடுத்தபோது, ஒரு தினப் போட்டிகளில் அதிக முறை நாட்-அவுட் வீரராக திகழ்ந்தார். 73 முறை அவர் விக்கெட்டை இழக்காமல் விளையாடியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஷான் போலக், இலங்கையின் சமிந்த வாஸ் ஆகியோர், 72 போட்டிகளில் அவுட்டாகாமல் இருந்துள்ளனர்.
100 ஸ்டம்பிங், 100வது அரை சதம் ஆகிய சாதனைகளை செய்ய முடியாத போதும், 300வது போட்டி அவருக்கு மனநிறைவை தந்திருக்கும்.
“தல டோணிதான் எங்களுக்கு எப்போதுமே கேப்டன்” என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறியுள்ளார். மேலும் அணியின் சார்பில், பிளாட்டினம் பேட் பரிசளித்து, டோணியை கவுரவித்தனர்.
வயதாகிவிட்டது, உடல்தகுதி இல்லை, 2019 உலகக் கோப்பைக்கு அவர் தேவையா என, பல விமர்சனங்கள் வந்தன. இருந்தாலும், மூன்று வகை உலகக் கோப்பையை வென்று தந்த டோணி, பிரச்னைகளை தலைக்கு எடுத்து செல்லாமல், மிகவும் அமைதியாகவும் நிதானமாகவும் முடிவு செய்யக் கூடியவர்.
மிகச் சிறந்த பினிஷர். இலங்கைக்கு எதிராக நேற்றைய போட்டியிலும், ஆட்டமிழக்காமல், 49 ரன்கள் எடுத்து, விமர்சனம் செய்தவர்களுக்கு பதில்சொல்லியுள்ளார்.
தல எப்போதும் தல தான் எனபதை டோணி மீண்டும் நிரூபித்துள்ளார்.