பெங்களூர்: இந்தியன் பிரீமியர் லீக், தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளைப் போலவே, கர்நாடகாவில், கர்நாடகா பிரீமியர் லீக் 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் பிரபலம்.
இதுவரை ஐந்து சீசன்களை பார்த்துள்ள இந்த கே.பி.எல். கிரிக்கெட் போட்டி 6வது சீசனுக்கு தயாராகி வருகிறது.
2009ல் துவங்கிய இந்த போட்டிகளில், முதல் சீசனில், பெங்களூரு பிராவிடன்ட் (ரூரல்) அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2010ல் மெங்களூரு யுனைடெட் அணியும், 2014ல் மைசூரு வாரியர்ஸ் அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன. 2015ல் பீஜாபுர் புல்ஸ் அணியும், 2016ல் பெல்லாரி டஸ்கர்ஸ் அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
2011, 2012, 2013ல் இந்தப் போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான போட்டிகளுக்கான அணிகள் தேர்வு சமீபத்தில் நடந்தது. மொத்தம், 215 வீரர்களுக்கான ஏலத்தில், ஏழு அணிகள் பங்கேற்றன.
இதற்காக, வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். முதல் பிரிவில், ரூ. 50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்ட சீனியர் வீரர்களும், மற்ற வீரர்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டனர்.
இதில், இந்திய அணிக்காக விளையாடும் கே.எல். ராகுலை, பெல்லாரி டஸ்கர்ஸ் அணி, 5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. அதிகபட்சமாக, அமித் வர்மாவை பெல்லாரி டஸ்கர்ஸ் அணியும், கே. கவுதமை, பெல்காம் பாந்தர்ஸ் அணியும், தலா ரூ. 7.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளன. மயாங்க் அகர்வாலை, பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி, ரூ.7 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. போட்டி தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.