கார்டிப்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி முதல் போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து பேட் செய்தது. தொடக்கத்தில் நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது அந்த அணி.
அலெக்ஸ் ஹேல்ஸ் 13 ரன்கள் எடுத்திருந்தபோது, ராயீஸ் பந்துவீச்சில் பாபர் ஆசாமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 14 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஜானி பெய்ர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்தார் ஜோ ரூட்.
அணியின் ஸ்கோர் 80 ரன்னாக இருக்கும்போது பெய்ர்ஸ்டோவ் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஜோ ரூட் 46 ரன்கள் எடுத்த நிலையிலும், மோர்கன் 33 ரன்கள் எடுத்த நிலையிலும் பெவிலியன் திரும்பினார்கள். அடுத்து களமிறங்கிய பட்லர் 4 ரன்னில் நடையை கட்டினார்.
பின்னர் மொயீன் அலி (11), ரசித் (7), பிளங்கட் (9) என வரிசையாக அவுட்டாகி வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி, அதிகபட்சமாக 3 விக்கெட்டை வீழ்த்தினார். ஜுனத் கான், அறிமுக வீரர் ரூமென் ராயிஸ் தலா 2 விக்கெட்டை சாய்த்தனர்.
இதனைத் தொடர்ந்து 212 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 37.1 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அசார் அலி 76 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். பஃகர் ஜமான் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாபர் அசாம் 38, ஹபீஸ் 31 ரன்களில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தானர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தனை எதிர்கொள்ளும்.