மும்பை பேட்டிங்
‘டாஸ்' ஜெயித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சிமோன்ஸ், பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
தடுமாற்றம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அபாரமான பந்து வீச்சை தொடக்கத்தில் அடித்து ஆட மும்பை இந்தியன்ஸ் அணியினர் தடுமாறினார்கள். இதனால் மும்பை அணியின் ரன் விகிதம் மெதுவாக உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 4.2 ஓவர்களில் 29 ரன்னாக இருக்கையில் பார்த்தீவ் பட்டேல் (21 ரன், 14 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) வெளியேறினார்.
மீட்ட பாண்டியன்
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மும்பை 11.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் மட்டுமே எடுத்தது. 5வது விக்கெட்டுக்கு ஹர்டிக் பான்ட்யா, பொல்லார்ட்டுடன் இணைந்தார். பொல்லார்ட் நிதானமாகவும், நேர்த்தியாகவும் விளையாட மறுமுனையில் ஹர்டிக் பான்ட்யா அதிரடி காட்டினார். இதனால் மும்பை அணியின் ரன் விகிதம் வேகமாக உயர தொடங்கியது. 15.1 ஓவர்களில் மும்பை அணி 100 ரன்னை எட்டியது. ஹர்டிக் பான்ட்யா 25 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். 17வது ஓவரில் உமேஷ்யாதவ் பந்து வீச்சில் ஹர்டிக் பான்ட்யா தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
172 ரன்கள் இலக்கு
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் மும்பை அணி 72 ரன்கள் சேர்த்தது. பொல்லார்ட் 38 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்னும், ஹர்டிக் பான்ட்யா 31 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 61 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் ஷகிப் அல்-ஹசன் 2 விக்கெட்டும், மோர்னே மோர்கல், சுனில் நரின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
மும்பை வெற்றி
பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்' வெற்றி பெற்றது.
கடைசி ஓவர் பரபரப்பு
கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. பொல்லார்ட் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில், நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற யூசுப் பதான் (52 ரன், 37 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன்) ஆட்டம் இழந்ததால் போட்டியில் திருப்பு முனை ஏற்பட்டது.
கடைசி 3 பந்துகள் டாட்
2வது பந்தில் உமேஷ் யாதவ் பவுண்டரி விளாசினார். 3-வது பந்தில் உமேஷ்யாதவ் ஒரு ரன் எடுத்தார். 4வது பந்து வைடாக வீசப்பட்டது. அடுத்த 3 பந்துகளையும் எதிர்கொண்ட பியுஷ்சாவ்லா ரன் எதுவும் அடிக்கவில்லை. இதனால் பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை கொல்கத்தா நழுவவிட்டது.