ஹைதராபாத்: கடைசி ஓவரில் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்துவிட்டது ஐபிஎல் பைனல். அப்பப்பா எவ்வளவு திரில்.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் வெறும் 129 ரன்கள்தான் எடுத்தபோது, இது எளிதில் சேஸ் செய்ய கூடிய ஸ்கோர் என்றுதான் ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் நினைத்தனர். ஆனால், புனே பேட்டிங்கின்போது ரன்ரேட் எகிறவில்லை.
இதனால் கடைசி ஓவருக்கு 11 ரன்கள் எடுத்தால் புனே வெற்றி பெறலாம் என்ற இக்கட்டான நிலைக்கு அணி வந்தது. கடைசி ஓவரை ஆஸி. முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜான்சன் வீசினார்.
முதல் பந்தை ஸ்லோ பாலாக வீச அதை லெக் திசையில் பவுண்டரி விளாசினார் மனோஜ் திவாரி. எனவே 5 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு அணி வந்தது. எதிர் முனையில் கேப்டன் ஸ்மித் இருந்த நிலையில், ரன்களை ஓடியே வெற்றிக் கனியை தட்டிப் பறித்திருக்கலாம். ஆனால் மனோஜ் திவாரி ஷாட் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதுதான் போட்டியின் திருப்புமுனையாக மாறியது.
மேலும் 4 பந்துகளுக்கு 7 ரன் என்ற நிலை ஏற்பட்டது. அடுத்த பந்தை ஸ்மித் சந்திக்க, அவர் அடித்தாட வேண்டிய நிலையில் ஆப்சைடில் தூக்கியடித்தார். ராயுடு அதை பவுண்டரி எல்லையில் கேட்ச்சாக்கினார். எனவே 3 பந்துகளுக்கு 7 ரன் என்ற நிலை ஏற்பட்டது.
அடுத்த பந்தை 17 வயதேயான இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் பேட்டில் பந்து படவில்லை. விக்கெட் கீப்பரிடம் சென்றது. இருப்பினும் மறுமுனையில் நின்ற கிறிஸ்டியன் பேட்டிங் கிரீசுக்குள் சென்றுவிட்டார்.
கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. சிக்ஸ் அடித்தால் போதுமே என புனே ரசிகர்கள் ஏங்கினர். ஆனால் 2 ரன்கள் கிடைத்தது. கடைசி பந்தில் தேவை 4 ரன்கள். 3 அடித்தால் டிரா. எனவே ரசிகர்கள் சீட் நுனிக்கு வந்தனர். லெக் திசையில் கிறிஸ்டியன் அடித்தார். 2 ரன்கள் எளிதாக ஓடிவிட்ட நிலையில், 3வது ரன்னை ஓடி டிரா செய்ய முயன்றது ஜோடி. ஆனால் விக்கெட் கீப்பர் கைக்கு சுஜித்தால் சரியாக வீசப்பட்டது. எனவே 3வது ரன் ஓடும்போது ரன்அவுட் செய்யப்பட்டனர். 1 ரன் வித்தியாசத்தில் வென்றது மும்பை. ஆனந்த கூத்தாடினார் கேப்டன் ரோகித் ஷர்மா.