நெஹ்ரா விளையாடிய கடைசி போட்டி
நியூசிலாந்துவுடன் நேற்று டெல்லியில் நடந்த டி-20 போட்டியே இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவரான நெஹ்ராவின் கடைசி ஆட்டம் ஆகும். இந்த போட்டியில் இருந்து அவர் அனைத்து விதமான ஐசிசி போட்டிகளில் இருந்தும் விடைபெற்றார். இந்த கடைசி போட்டியில் அவர் இந்திய கேப்டன் கோஹ்லியின் தலைமையின் கீழ் அவரது சொந்த மண்ணான டெல்லியில் விளையாடினார். நேற்று அவர் களத்தில் இறங்கும் வரை நெஹ்ராவின் கடைசி மேட்ச்சில் அவர் விளையாடுவது சந்தேகமாக இருந்து வந்தது. கடைசியாக நொடியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவர் இடம் பிடித்தார் .
தலையில் சுமந்து சென்றனர்
இந்த போட்டியில் இந்த 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றியுடன் திரும்பிய நாயகன் நெஹ்ராவுக்கு இந்திய வீரர்கள் சிறப்பான விடையளிப்பு கொடுத்தனர். இந்திய அணியின் கேப்டன் கோஹ்லியும், ஷிகர் தவானும் நெஹ்ராவை தலையில் சுமந்து கொண்டு அவர் கிரிக்கெட் விளையாடி பழகிய அந்த டெல்லி மைதானத்தை வலம் வந்தனர். இந்திய வீரர்கள் அனைவரும் ஒன்றாக இணைத்து செல்பி எடுத்துக் கொண்டனர்.
கடைசி ஓவர்
இந்த போட்டியில் நெஹ்ரா சிறப்பாக பந்து வீசினார். இந்திய அணியின் ரன்னை அடிக்க முடியாமல் நியூசிலாந்து திணறிய போது கடைசி ஓவரை வீச நெஹ்ரா அழைக்கப்பட்டார். அந்த போட்டிக்கும், நெஹ்ராவுக்கும் அதுதான் கடைசி ஓவர். போட்டி முடிந்த பின் இந்த ஓவர் குறித்து நெஹ்ரா பேசினார் ''பெரும்பாலான போட்டிகளில் நான்தான் கடைசி ஓவர் போட்டு இருக்கிறேன். அப்போது எல்லாம் நிறைய சமயங்களில் மிகவும் டென்ஷனாக ஓவர் போட வேண்டி இருக்கும். ஆனால் இந்த போட்டியில் அப்படி எதுவும் டென்சன் அணிக்கு இல்லை. ஆனாலும் எனக்கு தனிப்பட்ட முறையில் சில டென்சன்கள் இருந்தது. அதுதான் நான் போட்ட கடைசி ஓவர்" என்றார்.
இன்னும் இரண்டு வருடம்
மேலும் அவர் தனது ஓய்வு குறித்து பேசும் போது "நான் கிரிக்கெட் விளையாடுவதற்காகத்தான் வளர்க்கப்பட்டேன். எனக்கு இதைத்தவிர வேறு எதுவும் தெரியாது. இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து அணியில் இருந்து ஓய்வு பெற்று இருக்கலாமோ என்று கூட சமயங்களில் எனக்கு தோன்றியது. ஏன் இப்போது கூட மனதில் அப்படி தோன்றுகிறது. ஆனால் என் உடலுக்கு தெரியும் நான் ஒய்வு பெறவேண்டிய சரியான நேரம் இதுதான் என்று. அதனால்தான் விடைபெற்றேன்'' என்றார்.
கிரிக்கெட்டே மாறிவிட்டது
மேலும் அவர் தனது 18 வருட கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும் இந்த பேட்டியில் பேசியிருந்தார். அப்போது ''நான் 1997ல் இதே மைதானத்தில் என்னுடைய முதல் முதல் தர போட்டி ஒன்றை விளையாடினேன். நான் அப்போது நினைக்கவில்லை நீல சட்டையுடன் நான் இதே இடத்தில் இப்படி விடைபெறுவேன் என்று. நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததில் இருந்து இந்த விளையாட்டு பல வகையில் மாறியிருக்கிறது. அனைவரும் வித்தியாசமாக ஆட பழகி இருக்கின்றனர். இந்திய அணி மிகவும் பாதுகாப்பான கையில் இருக்கிறது'' என்றார்.
எனக்கு வருத்தம் இல்லை
மேலும் நெஹ்ரா விடைபெறுவது குறித்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அதில் "இனி கொஞ்ச நாட்களுக்கு என் உடலும் மனமும் கொஞ்சம் ஒய்வு எடுக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு எந்த வருத்தமும் மனதில் இல்லை. மிகவும் சந்தோசமாக இந்த அணியை விட்டு விடைபெறுகிறேன். எனக்கு இதை தவிர வேறு என்ன வேண்டும்'' என மிகவும் கனத்த குரலில் பேசி விடை கொடுத்தார்.