இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான், சூதாட்ட புகார் காரணமாக தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நெடு,நெடு உயர தோற்றத்தோடு, அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சு மூலம் பிரபலமானவர் முகமது இர்பான். இவர் பாகிஸ்தானின் உள்நாட்டு கிரிக்கெட் லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்றபோது சூதாட்ட தரகர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த விசாரணையின்போது, தரகர்களுடன் இருந்த பழக்கத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம், இர்பான் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் இர்பான் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்க தற்காலிக தடை விதித்து இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றச்சாட்டு குறித்த நோட்டீசுக்கு இன்னும் 14 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.