இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வருகிற 24 ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் சென்றுள்ளார். இதன் காரணமாக இந்தியா- பாகிஸ்தான் தொடர் நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடருக்கு இந்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இந்த மாதம் 24 ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வரையில் போட்டிகள் நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, 3 ஒருநாள் போட்டிகள், மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளை கொழும்புவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் இலங்கையில் மழைக்காலமாக இருப்பதால், ஆட்டங்கள் தடைபடாமல் இருக்கும் வகையில் இடங்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.
நீண்ட இழுபறிக்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரை காண மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாலும் போட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானுடனான தொடருக்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு 10 முதல் 12 நாள்கள் ஓய்வளிக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வீரர்கள் விளையாடி வருவதால் வீரர்களுக்கு ஓய்வு அளிப்பதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.