ராஞ்சி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி, டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 451 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி, 3 வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது 130 ரன்களுடன் புஜாராவும், 18 ரன்களுடன் சஹாவும் களத்தில் இருந்தனர். 4 வது நாளான இன்று, தொடர்ந்து ஆடிய புஜாராவும், சஹாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
புஜாரா 521 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார் . இதில் 21 பவுண்டரிகளும் அடங்கும். சஹா 214 பந்துகளை சந்தித்து சதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய புஜாரா 202 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியை விட 152 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.