ஜெய்ப்பூர்: டி-20 போட்டி என்பதே பேட்ஸ்மேன்களுக்கான போட்டியாக மாறியுள்ள நிலையில், 4 ஓவர்களில் ஒரு ரன்கூட கொடுக்காமல், 10 விக்கெட்டை வீழ்த்தி, ராஜஸ்தானைச் சேர்ந்த 15 வயது மாணவர் சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டபோதும், தலா 8 ஓவர்கள் விளையாடினர். அந்தப் போட்டியில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் குவித்தாலும், இரண்டு அணிகளும் இணைந்து 11 விக்கெட்களை இழந்தது.
வெற்றி மட்டுமே இலக்காக வைத்து பேட்ஸ்மேன்கள் விளையாடுவதால், விக்கெட் விழுவது சகஜம்தான். அதே நேரத்தில் பேட்ஸ்மேன்கள் ரன்களையும் சேர்த்து விடுகின்றனர்.
ஆனால் ராஜஸ்தானில் நடந்த ஒரு டி-20 போட்டியில், 4 ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்காமல், 10 விக்கெட்களை வீழ்த்தி, 15 வயதாகும் ஆகாஷ் சவுத்ரி என்ற இடதுகை மிதவேகப் பந்துவீச்சாளர் சாதனைப் படைத்துள்ளார்.
ராஜஸ்தானில் லேட் பவேர் சிங் டி-20 போட்டி நடக்கிறது. இதில் திஷா கிரிக்கெட் அகாதெமி 156 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய பியர்ஸ் அகாதெமி, 7 ஓவர்களில் 32 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் திஷா கிரிக்கெட் அகாதெமியின் இடதுகை மிதவேகப் பந்து வீச்சாளரான ஆகாஷ் சவுத்ரி, 4 ஓவர்களில், ஒரு ரன் கூட கொடுக்காமல், 10 விக்கெட்டுகளையும் சுருட்டி எடுத்தார்.
டி-20 போட்டியில் ஒரு வீரர் 10 விக்கெட்டை வீழ்த்தியதில்லை. அதுவும் ரன் ஏதும் கொடுக்காமல். பள்ளி மாணவர் ஆகாஷ் சவுத்ரி அந்த சாதனையைப் புரிந்துள்ளார்.