டெல்லி: முன்னாள் ஆல் ரவுண்டரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குநருமான ரவி சாஸ்திரி, அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் போட்டி மீண்டும் சூடாகியுள்ளது.
முன்பு இந்திய அணியின் இயக்குநராக இருந்தவர் ரவி சாஸ்திரி. தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு கடந்த ஆண்டு போட்டியிட்டவர். அந்தப் போட்டியில் கும்ப்ளேவிடம் தோல்வியைத் தழுவினார்.
தற்போது கும்ப்ளே பதவியிலிருந்து விலகி விட்டதால் அந்தப் பதவிக்கு ரவி சாஸ்திரி போட்டியிடவுள்ளார். ரவி சாஸ்திரி விண்ணப்பித்தால் அவருக்கே பதவி கிடைக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே ஷேவாக், டாம மூடி, லால்சந்த் ராஜ்புத், தொட்ட கணேஷ், ரிச்சர்ட் பைபஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இவர்களுடன் தற்போது சாஸ்திரியும் இணைகிறார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடருக்குப் பின்னர் கும்ப்ளே தனது பதவியை விட்டு விலகி விட்டார். கோஹ்லிக்கும் அவருக்கும் ஒத்துப் போகாத காரணத்தால் கும்ப்ளே போங்கடா, நீங்களும் கோச்சிங் பதவியும் என்று கூறி விட்டு போயே போய் விட்டார். இப்போது அந்த இடத்திற்கு யாரைப் போடுவது என்று பிசிசிஐ அலசி ஆராய்ந்து கொண்டுள்ளது.
இந்த நிலையில்தான் தானும் பதவிக்கு விண்ணப்பிக்கப் போவதாக சாஸ்திரி கூறியுள்ளார். கடந்த ஆண்டும் இவர் இப்பதவிக்குப் போட்டியிட்டார். அப்போது கும்ப்ளேவும் விண்ணப்பித்திருந்தார். இதற்கான நேர் காணல் தொடர்பாக சாஸ்திரிக்கும், ஆலோசனைக் குழு உறுப்பினரான கங்குலிக்கும் இடையே முட்டிக் கொண்டது.
கங்குலி தன்னை மதிக்கவில்லை என்று சாஸ்திரி குற்றம் சாட்டினார். முதலில் நீங்க பயிற்சியாளர் பதவியை மதிங்க என்று பதிலுக்கு கங்குலியும் சவுண்டு விடவே தலைமைப் பயிற்சியாளர் பதவி கும்ப்ளேவிடம் போய் விட்டது.
தற்போது ரவி சாஸ்திரி மீண்டும் களத்தில் குதிக்கப் போவதால் போட்டி படு சூடாகியுள்ளது. இப்போதைக்கு ஷேவாக் போட்டியில் முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சாஸ்திரியும் உள்ளே இறங்கினால் அவருக்கும், ஷேவாக்குக்கும் இடையே கடும் மோதல் உருவாகும்.
கங்குலி பெரும்பாலும் ஷேவாக்கையே ஆதரிக்க வாய்ப்புள்ளது. சச்சின் ஆதரவாக சாஸ்திரிக்குக் கிடைக்கலாம். எனவே யாருக்கு ஜெயம் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.