ஐசிசி சாம்பியன் டிராபி
கோஹ்லிக்கும், கும்ப்ளேவுக்கும் இடையே உள்ள மோதல் லண்டனில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கும்ப்ளே தாமாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இருவரையும் சமாதானம் செய்ய பிசிசிஐ முயற்சித்தும் பலனில்லை. இதனால் இந்தியாவின் தலைமை கோச் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
ஷேவாக் விண்ணப்பம்
இந்திய முன்னணி வீரர் வீரேந்திர ஷேவாக், லால்சந்த் ராஜ்புட், தோடா கணேஷ், வெங்கடேஷ் பிரசாத், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி, பாகிஸ்தான் முன்னாள் கோச் ரிச்சர்டு பைபஸ், மேற்கு இந்திய தீவுகளின் முன்னாள் கோச் ஃபில் சைமன்ஸ் உள்ளிட்டோர் இந்தியாவின் தலைமை கோச் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். அப்பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 9-ஆம் தேதி ஆகும். இதைத் தொடர்ந்து தலைமை கோச் பதவிக்கு கோஹ்லியின் ஆதரவாளரான ரவி சாஸ்திரியும் முறையாக விண்ணப்பித்துள்ளார்.
ஜூலை 10-இல் நேர்காணல்
இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் என்று கிரிக்கெட் வழிக்காட்டு குழுவின் உறுப்பினர் சௌரவ் கங்குலி தெரிவித்தார். தலைமை கோச் தேர்வு குறித்து சுனில் கவாஸ்கர் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார்.
சாஸ்திரிக்கே வாய்ப்பு
அப்போது அவர் கூறுகையில், தலைமை கோச் பணிக்கு பிசிசிஐயின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி முறையாக விண்ணப்பித்துள்ளார். தற்போது அப்பதவிக்கு விண்ணப்பித்துள்ள 7 பேரில் ரவி சாஸ்திரி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது என்றார் சுனில் கவாஸ்கர்.